சென்னையில் புத்தாண்டு கொண்டாட போறீங்களா! இத படிங்க முதல்ல.. மேஜர் அட்வைஸ் - 18000 போலீஸ் குவிப்பு
சென்னை: சென்னையில் நாளை இரவு புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்ட உள்ளது. இந்நிலையில் தான் நாளை இரவு 9 மணி முதல் சென்னை மாநகர் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வர உள்ளது.
உலகம் முழுவதும் நாளை ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற உள்ளது. 2024ம் ஆண்டை வரவேற்க அனைவரும் தயாராகி வருகின்றனர். இந்தியாவிலும் பல்வேறு முக்கிய நகரங்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் என்பது நாளை இரவே தொடங்கிவிடும்.

குறிப்பாக சென்னையில் நாளை இரவு முதல் புத்தாண்டு கொண்டாட்டம் என்பது களைகட்ட உள்ளது. இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதங்களை தடுக்கவும், மக்கள் அமைதியான முறையில் புத்தாண்டை கொண்டாடவும் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ராத்தோர் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை இரவு முதல் சென்னை மாநகரில் மொத்தம் 18 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்கும் வகையில் மயிலாப்பூர், அடையாறு, பூக்கடை, வண்ணாரப்பேட்டை உள்பட 420 இடங்களில் வாகன தணிக்கை என்பது நடைபெற உள்ளது. மேலும் ரேஸில் ஈடுபடுவோரை தடுக்க 25 சாலை பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர 1,500 ஊர்க்காவல் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மெரினா உள்பட முக்கிய கடற்கரைகளில் மக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ளது. புத்தாண்டையொட்டி கடலில் மக்கள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் அதனை மீறி கடலில் இறங்கலாம். இதனால் அங்கு குதிரை படைகளில் காவலர்கள் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.
மேலும் ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்கள், சர்ச்சுகளில் சிறப்பு வழிபாடு, பிரார்த்தனை நடைபெற உள்ளது. இதனால் சென்னை மாநகரில் உள்ள முக்கிய 100 கோவில், சர்ச்சுகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் போலீஸ் அனுமதி பெற்றே ஒலிப்பெருக்கிகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை என்பது பாய உள்ளது.
போலீஸ் அதிகாரிகள், காவலர்கள் அனைவரும் நாளை இரவு 7 மணி முதல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு செல்வார்கள். அதன்பிறகு நாளை இரவு 9 மணி முதல் சென்னை மாநகர் முழுமையாக போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வரும். இதனால் புத்தாண்டை அமைதியாக கொண்டாடும் வகையில் பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ராத்தோர் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications