முடியவே முடியாது.. அமித்ஷாவிடம் பட்டென பேசிய எடப்பாடி! திக்கு தெரியாமல் தவிக்கும் டிடிவி, ஓபிஎஸ்!
சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதில் என்ன நடந்தது? அமித் ஷா கேட்ட கேள்விகளுக்கு எடப்பாடியின் பதில் என்ன என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக கடந்த சில ஆண்டுகளாகத் தொடர் தேர்தல் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இதனால், கட்சியின் மூத்த தலைவர்கள், குறிப்பாக கே.ஏ. செங்கோட்டையன், "சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியோடு இணைக்காமல் 2026 தேர்தலில் வெற்றி பெற முடியாது" என்று வலியுறுத்தி வந்தனர்.
கடந்த மாதம் செங்கோட்டையன், அதிமுக ஒருங்கிணைப்புக்காக 10 நாட்கள் அவகாசம் அளித்தும், அதன் பின்னர் அவரது கட்சிப் பதவிகள் நீக்கப்பட்டன. இந்நிலையில் டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்ட செங்கோட்டையன், அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எடப்பாடி டெல்லி பயணம்
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தர்மபுரி சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு திடீரென டெல்லிக்குச் சென்றார். குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக எடப்பாடி பழனிசாமி செல்கிறார் என்றாலும், அவர் அமித் ஷாவைத்தான் சந்திக்கப் போகிறார் என அதிமுக வட்டாரங்கள் கூறினர். இந்த நிலையில் சொன்னது போலவே திடீரென நேற்று முன்தினம் இரவு எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார். அதற்குப் பிறகு நேற்று அமித் ஷாவைச் சந்தித்ததற்கான காரணம் குறித்து விளக்கியிருந்தார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி அமித்ஷா சந்திப்பு
அதாவது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் சென்று கடிதம் வழங்கியதாகக் கூறியிருந்தார். ஆனால் உண்மையில் அதிமுக விவகாரங்கள் தொடர்பாக அமித் ஷா சில கேள்விகளைக் கேட்டதாகவும், அதற்கு திட்டவட்டமாக எடப்பாடி பழனிசாமி பதிலளித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அமித் ஷா எடப்பாடியிடம் கேட்ட கேள்விகள் என்ன, அதற்கு எடப்பாடி பழனிசாமியின் பதில் என்ன என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
செங்கோட்டையன்
டெல்லியில் நடந்த சந்திப்பில் அமித் ஷா, பழனிசாமியிடம், "செங்கோட்டையனின் கோரிக்கை நியாயமானதே. சசிகலா தரப்பினரை மீண்டும் இணைப்பதில் உங்களுக்கு என்ன சிரமம்?" என்று கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பதிலளித்த பழனிசாமி, "அதிமுக ஆட்சியை கவிழ்க்கும் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு கட்சியிலும், கூட்டணியிலும் இடமே இல்லை. அவர்கள் செய்த துரோகம் மன்னிக்க முடியாதது. அதிமுக தொண்டர்களின் மனநிலையையும் பாதிக்கும். எனவே, சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஆகியோரை கட்சியிலும், கூட்டணியிலும் சேர்க்க சாத்தியமில்லை" என்று அமித் ஷாவிடம் தெளிவாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அமித் ஷா
தொடர்ந்து, "சரி, கட்சியில் சேர்க்க வேண்டாம். ஆனால் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் அவர்களுக்கு உட்பிரிவு ஒதுக்கீடு வழங்கலாம். அதில் உங்களுக்கு ஏதேனும் எதிர்ப்பு இருக்கிறதா?" என்று அமித் ஷா கேட்டுள்ளார். அதற்கு பழனிசாமி, "தமிழகம் முழுவதும் நான் பிரச்சாரம் செய்யும்போது, 'அவர்கள் அதிமுகவை அழிக்க முயன்றவர்கள்' என்று சொல்கிறேன். அப்படி சொல்வோருக்கே ஆதரவாக பாஜக ஒதுக்கீட்டில் பிரச்சாரம் செய்வது எப்படி சாத்தியமாகும்? தொண்டர்களும் அதைப் பொறுக்க மாட்டார்கள். எனவே அதுவும் முடியாது" என்று உறுதியான பதில் அளித்துள்ளாராம்.
முத்துராமலிங்க தேவர்
"அப்படியானால், தென் மாவட்டங்களில் அவர்களிடம் உள்ள வாக்கு வங்கி நமக்குக் கிடைக்காமல் போகும். இது திமுகவுக்கு சாதகமாக அமையாதா?" என்று அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பழனிசாமி, "அவர்களிடம் சொல்வதற்கு வாக்கு வங்கி எதுவும் இல்லை. மாறாக, முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா வழங்கினால், அது நமது கூட்டணிக்கு பெரும் பலம் சேர்க்கும்" என்று பரிந்துரை செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஓபிஎஸ் டிடிவி தினகரன்
இந்த சந்திப்புக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி சென்னைக்கு வந்தார். ஆனால், விமான நிலையத்தில் தொண்டர்களையும் செய்தியாளர்களையும் சந்திக்காமல் நேரடியாக சேலம் சென்றுவிட்டார். இதனால் அவரை எதிர்பார்த்திருந்த ஆதரவாளர்களும் ஊடகவியலாளர்களும் ஏமாற்றமடைந்தனர். அதிமுகவில் இருந்து விலகிய முக்கிய தலைவர்கள் தற்போது திமுகவில் அமைச்சர்களாகவும் முக்கிய நிர்வாகிகளாகவும் வலம் வருகின்றனர். ஆனால், தனிக்கட்சி ஆரம்பித்த டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் பாஜகவை நம்பியிருந்த நிலையில் தற்போது எடப்பாடி அவர்களும் திக்குத் தெரியாமல் திணறி வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவதாக ஓர் அணியை அமைக்க அவர்கள் திட்டமிட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications