பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது இதற்காக தான்... அமைச்சர் உதயகுமார் விளக்கம்
சென்னை: தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் உரிமைகளை பெறுவதற்காகவே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக அமைச்சர் உதயகுமார் விளக்கமளித்துள்ளார்.
அதிமுக தலைமையில் பாஜக, பாமக இடம் பெற்றுள்ள நிலையில், பாஜகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், அதிமுக எப்போதும் கொள்கையை விட்டுக் கொடுத்தது இல்லை என்று கூறியுள்ளார்.
முன்னதாக, அதிமுக கூட்டணி தான் ராஜ்ஜியம் அமைக்கும் கூட்டணி என்றும், திமுக அமைக்கும் கூட்டணி பூஜ்ஜியம் தான் எனவும் விமர்சனம் செய்தார்.
பாமகவை கூட்டணியில் இணைத்தது போல், தேமுதிகவையும் இழுக்க அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாமகவை போல், தேமுதிகவும் அதிக இடங்களை கேட்பதால் இழுபறி நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, சென்னை புறநகர் ரயில் சேவைக்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என சென்னையில் ரயில்வே திட்டப்பணிகள் தொடக்க விழாவில் எம்.பி. ஜெயவர்தன் அமைச்சர் பியூஷ்கோயலிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.