மக்களவைத் தேர்தல்.. அதிமுக, திமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது.. பரபரக்கும் அரசியல் களம்
சென்னை:மக்களவை தேர்தலையொட்டி திமுகவும் அதிமுகவும் விருப்பமனு அளித்த வேட்பாளர்களுக்கான நேர்காணலை தொடங்கியுள்ளன.
மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.

அதன்படி திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக, ஐயூஎம்எல், தமிழக வாழ்வுரிமை கட்சி, மதிமுக உள்ளிட்டவை கூட்டணி அமைத்துள்ளது. இவற்றில் அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவிட்டது.
அதன்படி திமுக 21 இடங்களிலும் காங்கிரஸ் 10 இடங்களிலும் விசிக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் தலா இரு இடங்களிலும், கொமதேக, ஐயூஎம்எல், மதிமுக தலா 1 இடங்களிலும் போட்டியிடுகின்றன. அதாவது கூட்டணி கட்சிக்கு 19 இடங்களை திமுக ஒதுக்கியுள்ளது.
இந்த நிலையில் நேரடியாக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கு இன்று திமுக வேட்பாளர் நேர்காணல் நடத்துகிறது. இதற்கான விருப்பமனுக்களை கடந்த மாதமே திமுகவினர் பெற்றுக் கொண்டனர். மொத்தம் 2,984 பேர் விருப்பமனுக்களை கொடுத்துள்ளனர்.இந்த நிலையில் இன்று நடைபெறும் நேர்காணலை முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் நடத்துகிறார்.
நேர்காணலுக்கு விருப்பமனு அளித்தவர்கள் மட்டும் வர வேண்டும் என்றும் பரிந்துரைப்பவர்கள் உள்ளிட்டோர் யாரும் வரக் கூடாது என்றும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். நேர்காணலுக்கு வருவோரிடம் தொகுதி நிலவரம் குறித்தும் வெற்றி வாய்ப்பு குறித்தும் முதல்வர் கேட்டறிவார்.
அதிமுக நேர்காணல்: அதிமுக கூட்டணியில் அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சி, புரட்சி பாரதம், இந்திய குடியரசு கட்சி உள்ளிட்டவை இணைந்துள்ளன. பெரிய கட்சிகளான பாமக, தேமுதிகவிடம் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் இன்றைய தினம் அமாவாசை நன்னாளில் வேட்பாளருக்கான நேர்காணல் தொடங்கியது.
அதிமுக தலைமை கழகத்தில் இன்று தொடங்கும் நேர்காணல் நாளையும் தொடரும். இன்று 20 மக்களவை தொகுதிகளுக்கும் நாளை 20 மக்களவை தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெறுகிறது. விருப்ப மனு அளித்தவர்கள் அதற்கான அசல் ரசீதுடன் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 2,475 பேர் விருப்பமனுக்களை அளித்துள்ளனர். இன்று காலை 10 தொகுதிகளுக்கும் மாலை 10 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடத்தப்படுகிறது. முதலில் திருவள்ளூர் (தனி), சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது.
பிற்பகல் 2 மணிக்கு திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி (தனி), கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற உள்ளது. நாளை எஞ்சிய 20 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications