எடப்பாடி பழனிசாமி கொடுக்கும் விருந்துக்கு பின்.. பியூஷ் கோயல் வெளியிடும் அறிவிப்பு? வானதி அப்டேட்!
சென்னை: என்டிஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி அளிக்கும் விருந்துக்கு பின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்து முக்கிய விஷயத்தை வெளியிடுவார் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதனால் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அடுத்தடுத்த பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே பாமக மற்றும் அமமுக ஆகிய கட்சிகளுடனான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் உறுதி செய்துவிட்டனர். அடுத்ததாக ஐஜேகே, தமாகா, ஜான் பாண்டியன், ஏசி சண்முகம் ஆகியோருடனும் பேசி முடிக்கப்பட்டுவிட்டது.

இன்னும் தேமுதிக உடனான பேச்சுவார்த்தை மட்டுமே தொடங்கப்படாமல் இருக்கிறது. இதனிடையே பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நாளை மதுராந்தகத்தில் நடக்கவுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் என்டிஏ கூட்டணியில் உள்ள அத்தனை கூட்டணி தலைவர்களையும் மேடையேற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காகவே மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழ்நாட்டில் முகாமிட்டு சந்திப்புகளை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அதிமுக உடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையிலும் பியூஷ் கோயல் ஆர்வம் காட்டி வருகிறார். இதனிடையே பசுமை வழிச்சாலையில் உள்ள தனது வீட்டில் எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு காலை விருந்து அளித்து வருகிறார். இந்த விருந்தில் பியூஷ் கோயல், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அதிமுக தரப்பில் எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்று இருக்கின்றனர். இந்த காலை விருந்துக்கு பின் பாஜகவுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நாளுக்கு நாள் என்டிஏ கூட்டணியின் பலம் அதிகரித்து வருகிறது.
நாளை மோடி பங்கேற்கும் கூட்டம் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு தொடக்க கூட்டமாக அமையும். என்டிஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி அளிக்கும் விருந்தில் பியூஷ் கோயல் பங்கேற்றுள்ளார். இந்த விருந்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பியூஷ் கோயல் விஷயத்தை வெளியிடுவார் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications