நாங்குநேரி, விக்கிரவாண்டி, காமராஜ் நகர் தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் நாளை காலை அறிவிப்பு
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தலைமை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்தது. இந்நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி, காமராஜ் நகர் தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் நாளை காலை அறிவிக்கப்படும் என துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டிமற்றும் புதுச்சேரி மாநிலம் காமராஜர் நகர் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நேற்று நடந்து முடிந்தது.
இந்நிலையில் இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி காமராஜ் நகர் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது இறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம், "நாங்குநேரி, விக்கிரவாண்டி, காமராஜ் நகர் தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் நாளை காலை அறிவிக்கப்பட உள்ளனர். இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என்றார்.