எடப்பாடியாரை வழிக்கு கொண்டு வந்த 11 பேர்.. பஞ்சாயத்து முடிவுக்கு வர இதுதான் முக்கிய காரணமாமே!
முடிவுக்கு வந்தது அதிமுகவின் உட்கட்சி பஞ்சாயத்து
சென்னை: கட்ட கடைசியாக ஓபிஎஸ் சொன்ன நிபந்தனைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக் கொண்ட காரணத்தால்தான் பஞ்சாயத்து முடிவுக்கு வரவுள்ளதாக ராயப்பேட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்.. இதை வைத்து அதிமுகவில் திடீர் பஞ்சாயத்து வெடித்தது. யார் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்ற கேள்விக்கே இடமில்லை. எடப்பாடியார்தான் மீண்டும் முதல்வர் என்று அவரது தரப்பு வக்காலத்து வாங்க, அதெல்லாம் கிடையாது ஓபிஎஸ்தான் அடுத்த முதல்வர் என்று அவரது தரப்பு கொடி பிடிக்க அதிமுக வட்டாரத்தில் பற்றிக் கொண்டு விட்டது.

ஓபிஎஸ் திடீரென கோபமாகி தனது சொந்த ஊருக்கு கிளம்பிப் போனார்... இதனால் மேலும் பரபரப்பு அதிகமானது. அடுத்த தர்மயுத்தம் வருமோ என்று பலரும் எதிர்பார்த்தனர்.. ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.. காரணம் "ஸ்கிரிப்ட்" அப்படி என்று பலர் நமுட்டுச் சிரிப்பு சிரித்தனர். இதனால் அடுத்து என்ன நடக்குமோ என்று பலரும் அங்கலாய்த்தபடி இருந்தனர்.
ஆனால் இப்போது திடீரென இரு தரப்புக்கும் இடையே அமைதி உடன்பாடு ஏற்பட்டு விட்டதாக பலமாக பேச்சு அடிபடுகிறது. அதன்படி முதல்வர் பதவி ஈபிஎஸ்ஸுக்கும், கட்சி பொது செயலாளர் பதவி ஓபிஎஸ்ஸுக்கும் என முடிவாகி விட்டதாம். ஆனால் இந்த உடன்பாடு ஏற்பட முக்கிய காரணமே ஓபிஎஸ் போட்ட அந்த பலமான நிபந்தனைதானாம். அதற்கு வேறு வழியே இல்லாமல் முதல்வர் ஒப்புக் கொண்டதால்தான் இந்த உடன்பாடு ஏற்பட முக்கியக் காரணமாக அமைந்ததாம்.
அது என்னவென்றால்.. அதுதான் அந்த 11 பேர் கொண்ட வழிகாட்டுக் குழு. இதைத்தான் ஓபிஎஸ் முக்கியமாக வலியுறுத்தி வந்தார். கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்தும் வகையில் வழிகாட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் நான் இறங்கி வருவேன் என்று ஓபிஎஸ் தரப்பு பிடிவாதமாக கூறி வந்ததால், வேறு வழியில்லாமல் அதற்கு ஒப்புக் கொண்டு விட்டாராம் முதல்வர் எடப்பாடியார்.
இதன்படி தற்போது ஓபிஎஸ் விருப்பத்திற்கேற்ப இந்த 11 பேர் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது. இதில் சம அளவில் இரு தரப்பை சேர்ந்த பிரதிநிதிகளும் இடம் பெறுவார்கள். இதற்கும் தலைவர் பதவி உண்டா. அதற்கும் போட்டி வருமா என்று தெரியவில்லை. ஆனால் இந்த குழு இருந்தால்தான் எடப்பாடியாருக்கு அவ்வப்போது பிரேக் போட முடியும் என்று ஓபிஎஸ் கருதுவதால் இந்தக் குழு மீது அவர் ரொம்பவே தீவிரமாக இருந்தார் என்கிறார்கள்.
நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் ஓபிஎஸ்ஸை பொதுச் செயலாளராக அறிவிக்கும் திட்டமும் இருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. அதன்படி முதல்வர்வேட்பாளராக முதல்வரையும், பொதுச் செயலாளராக ஓபிஎஸ்ஸையும் அறிவித்து கட்சியினரை குஷிப்படுத்த அதிமுக தரப்பு தயாராகி வருகிறது என்று சொல்கிறார்கள்... இந்த முடிவை எதிர்த்து வேறு யாரேனும் தர்மயுத்தம் தொடங்குவார்களா என்பது நாளை தெரிய வரும். பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications