ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்துக்கு வெளிநாட்டு பணமா? ஆளுநர் ரவிக்கு அதிமுக கேபி முனுசாமி கடும் கண்டனம்
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்துக்கு வெளிநாட்டு பணம் கிடைத்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு அதிமுக மூத்த தலைவர் கேபி முனுசாமி எம்.எல்.ஏ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சதி உள்ளது; வெளிநாட்டு பண உதவி இருக்கிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவர் கேபி முனுசாமி எம்.எல்.ஏ, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மக்களின் எதிர்ப்பு காரணமாக, உணர்வுகள் காரணமாக கடந்த அதிமுக அரசு மூடியது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்துக்கு வெளிநாட்டு பணம் வந்தது என ஆளுநர் பதவியில் இருக்கும் ஒருவர் பொதுவெளியில் கருத்துகள் சொல்வது அவருக்கு அழகு அல்ல என்றார்.
மேலும் பிரதமர் மோடி தமது கடுமையான உழைப்பால் மக்களைக் காக்கும் தலைவராக உயர்ந்துள்ளார். அவரது காலகட்டத்தில் அந்நிய பணம் இந்தியாவுக்குள் வர அனுமதிக்கமாட்டார். அப்படி வந்தால் கடும் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைப்பார். பிரதமர் மோடி நமது நாட்டின் ஆகச் சிறந்த பிரதமர் என்றார் கேபி முனுசாமி.












Click it and Unblock the Notifications