கண்டிப்பாக இதை செய்ய வேண்டும்..முதல்வர் ஸ்டாலினுக்கு திடீர் கோரிக்கை வைத்த ஓபிஎஸ்! பின்னணி என்ன?
சென்னை : கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசியை தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாக செலுத்த வேண்டுமென திமுக அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது.
மாநிலத்தில் அரசு அனுமதித்த வயதுடையவர்களுக்கு பெரும்பாலானோருக்கு முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை தடுப்பூசி கட்டணம் 365 ரூபாயாக இருக்கும் எனவும், தனியார் மையங்களில் செலுத்திக் கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்தது.

கொரோனா தடுப்பூசி
இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசியை தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாக செலுத்த வேண்டுமென ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடலில் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம் என்ற கவிமணியின் கூற்றும் சுவரை வைத்துதான் சித்திரம் எழுத முடியும் என்னும் பழமொழியும் அறிவைப் பெற்ற மனிதப்பிறவி போற்றிப் பாதுகாப்பது அவசியம் என்பதை உணர்த்துகிறது. பொது சுகாதார சவால்களை எதிர்கொண்டு மருத்துவ சேவை வழங்குகின்ற கடமையும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு.

முன்னெச்சரிக்கை தடுப்பூசி
கொரோனா தொற்றுநோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஏதுவாக அனைவருக்கும் இரண்டு முறை தடுப்பூசி செலுத்தும் முறையை மாநில அரசுகள் மூலமாக மத்திய அரசு இலவசமாக நடைமுறைப்படுத்தி அந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கப் பட்டார்கள். தற்போது மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பினை தரும் பொருட்டு இரண்டு முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டு ஒன்பது மாதங்கள் கடந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் மூன்றாவது தவணை முன்னெச்சரிக்கை தடுப்பூசியினை செலுத்திக் கொள்வதற்கான வசதி தனியார் தடுப்பூசி மையங்களில் இந்தமாதம் 10-ந் தேதி முதல் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும், இந்த முன்னெச்சரிக்கை தடுப்பூசிக்கான கட்டணம் சேவைக் கட்டணம் உட்பட 375 ரூபாய் அளவுக்கு இருக்கும் என்றும், இது தொடர்பான நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

இலவசமாக செலுத்த வேண்டும்
கொரோனா தொற்று ஓரளவு குறைந்து பெரும்பாலான மக்களின் இயல்பு வாழ்க்கை தற்போது தொடங்கியுள்ள நிலையில், இந்தக் கட்டணம் மக்களுக்கு ஒரு கூடுதல் சுமை. மேலும், கிராமப்புறங்களில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திக் கொள்ள நீண்டதூரம் பயணம் செய்ய வேண்டிய நிலைஏற்படும். 18 முதல் 60 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்த முன்னெச்சரிக்கை தடுப்பூசியினையும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக செலுத்த வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது.

தமிழக அரசுக்கு கோரிக்கை
மேலும், இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கிட்டத்தட்ட 186 கோடி தடுப்பூசிகளும், தமிழ்நாட்டில் மட்டும் 10.39 கோடி தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு இந்தத் திட்டம் வெற்றியடைந்து இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்தத் தடுப்பூசித் திட்டம் இலவசமாக மேற்கொள்ளப்படுவது தான்.எனவே, முதல்-அமைச்சர் மத்திய அரசுடன் கலந்தாலோசித்து, முன்னெச்சரிக்கை தடுப்பூசியினை இலவசமாக அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் செலுத்துவதற்குரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென்றும், இல்லையெனில் மாநிலஅரசின் நிதியிலிருந்து முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications