கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்.. ஓபிஎஸ் மகன் பரபரப்பு பதிவு
சென்னை: கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்.. என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப் போட்ட பதிவு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதிவின் மூலம் அவர் தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று கூறுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அண்மையில் மதுரையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமாகிய ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சசிகலாவை அ.தி.மு.க ஏற்றுக் கொள்ளுமா?' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ''அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களை ஏற்றுக் கொள்வது என்பது மக்களின் விருப்பம்.
சசிகலாவை அ.தி.மு.கவில் இணைப்பது தொடர்பாக தலைமைக் கழக நிர்வாகிகள் பேசி முடிவுசெய்வார்கள். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தொடங்கிய இந்த இயக்கம் தொண்டர்களுக்காகவே இன்றளவும் செயல்பட்டு வருகிறது. மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் கட்சி செயல்பட்டு வருகிறது'' என்றார்.

கேபி முனுசாமி
இதற்கு உடனே ரியாக்ட் செய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,அஇஅதிமுகவில் சசிகலாவுக்கு ஒருபோதும் இடமில்லை என்றார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி கூறும் போது, கழக நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து சசிகலாவை அஇஅதிமுகவில் சேர்க்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது; எந்த சூழ்நிலையிலையும் சசிகலாவை மீண்டும் அஇஅதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில் சசிகலா குறித்து நடக்கும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து அமைதியாக இருந்த வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தொடர்ந்து எதிர்வினை ஆற்றி வருகிறார்கள். ஓபிஎஸ் மவுனம் கலைத்தால் மட்டுமே பிரச்சனை தீரும் என்கிற நிலை இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்,.

ஜெயபிரதீப் பதிவு
இந்நிலையில் கண்ணால் கண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்.. என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் போட்ட பதிவு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது: "ஒரு சீடன் மற்றவர்கள் செய்த சிறிய தவறுகளைப் பற்றி உள்ளதும் இல்லாததுமான செய்திகளை மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவனாய் இருந்தான். அதனைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்புக் கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின் தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு, அவனிடம் ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று அதை சிறிது சிறிதாகப் பிய்த்து காற்றில் ஊதி பறக்க விட்டு வரும்படி சொன்னார்.

பஞ்சு எப்படி
சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னார். "சரி இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா". சீடன் திகைத்தான், இதென்ன ஆகிற செயலா? "குருவே அந்த பஞ்சு காற்றில் இந்நேரம் எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து வரமுடியும்?" "ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்து திரும்பக் கொண்டு வரமுடியவில்லை.

விளைவுகள்
மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி வதந்திகளைப் பறக்க விட்டு வந்து இருக்கிறாய். அவை யார் யார் வாயில் எப்படியெல்லாம் மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோ?. நீ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றை திரும்ப பெறமுடியும் என்று நினைக்கிறாயா?" அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது.

உண்மை தகவல்
கண்ணீர் மல்க வெட்கித் தலை குனிந்த சீடன் அன்றிலிருந்து அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான். யாராவது ஒருவர் தங்களிடம் வந்து ஒரு விஷயத்தைப் பற்றி தெரிவித்தார் என்றால், அதை பொறுமையுடன் நன்கு சிந்தித்து ஆராய்ந்து தெளிவான உண்மை தகவல்களை மற்றவரிடம் தெரியப்படுத்துங்கள்" இவ்வாறு அந்த பதிவில் ஜெயபிரதீப் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications