திமுக, பாஜக தான் டார்கெட்.. ர.ர.க்களுக்கு எடப்பாடியின் முக்கிய அட்வைஸ்! 2026க்கு அதிரடியாக 6 ப்ளான்!
சென்னை: தமிழக அரசியல் பரபரப்புகளுக்கு இடையே அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் பேசிய எடப்பாடி பழனிசாமி திமுக, பாஜகவை தவிர மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் எனக் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர் கொள்ளும் வகையில் 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் உள்ளிட்ட ஆறு திட்டங்களை வகுத்திருப்பதாக கூறப்படுகிறது. நமக்கு கிடைத்த சில தகவல்களை தற்போது விரிவாக பார்க்கலாம்..
அதிமுக ஒரு எக்கு கோட்டை என ஜெயலலிதா கூறியிருந்த நிலையில், அவரது மறைவுக்குப் பிறகு அதிமுக பல அணிகளாகவும் கட்சிகளாகவும் சிதறுண்டு கிடக்கிறது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றது முதல் அந்தக் கட்சி சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்திருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது நடைபெற்ற இடைத்தேர்தல், அதற்குப் பிறகு மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற, ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள், ஈரோடு இடைத்தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. 2024 மக்களவைத் தேர்தலிலும் 40க்கு 40 என தமிழகம் புதுச்சேரியில் அதிமுக மண்ணை கவ்வியது.
இதனால் அதிமுக ஒன்றியணைய வேண்டும், டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை மீண்டு கட்சிக்குள் கொண்டு வர வேண்டுமென்ற கோரிக்கை குரல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்படடது. அதன்படி இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெற்றது.
இதில், அதிமுக மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த, மாநிலச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆரம்பிப்பது, கூட்டணி கட்சிகளை அழைப்பது, ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவைத் தவிர மற்ற அனைவரையும் கட்சிக்குள் கொண்டு வருவது உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி வகுத்திருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன், மாவட்ட செயலாளர்கள் தீவிரமாக கட்சி பணியாற்றினாலே போதும் நிச்சயம் நமக்கு வெற்றி கிடைக்கும். மூத்த நிர்வாகிகளையும் புதிய நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டும் என மாவட்ட செயலாளர் அவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
மேலும் வரும் தேர்தலில் இளைஞர்களின் பங்கு மிக அதிகமாக இருப்பதால் இளைஞர்களுக்கு அதிக பொறுப்புகள் வழங்க வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மாவட்ட அளவில் இருந்து ஒன்றியம், வட்டம்,வார்டு, கிளை என அனைத்து பகுதிகளிலும் கட்சியின் அனைத்து அணிகளுக்கும் அவைத்தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகள் வழங்க உத்தரவிட்டிருக்கிறார்.
அதன்படி சுமார் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு அதிமுகவில் பொறுப்பு வழங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. சமூக வலைதளங்களில் தற்போது அதிமுக சிறப்பாக செயல்படுத்தி வந்தாலும், திமுகவின் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையிலும் அவர்களுக்கு இன்னும் அழுத்தம் கொடுக்கும் வகையிலும் ஐடி விங் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். திமுகவிற்கு உடனடியாக எதிர்வினை ஆற்ற வேண்டும் என உத்தரவு பறந்து இருக்கிறது.
மேலும் 67 ஆயிரம் பூத்துகளுக்கும் கிளைக் கழகம் அமைக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது. ஒரு தெருவுக்கு 10 நிர்வாகிகள், 10 வாக்காளர்களுக்கு ஒரு நிர்வாகி என கட்சியின் அனைத்து பணியாளர்களையும் தேர்தலுக்கு பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் 2026 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகளையும் பயணத்திட்டத்தையும் வகுக்குமாறு மூத்த நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
2025 இறுதி பகுதியில் இந்த சுற்றுப்பயணம் இருக்கும். அதே நேரத்தில் அதற்கு முன்னதாக அந்தந்த பகுதி முக்கிய விழாக்கள், சமுதாய நிகழ்வுகள் உள்ளிட்டவத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்வது போல அழைப்பு விடுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறதாம். இதனால் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிச்சாமி வலம் வர இருக்கிறார் என்கின்றனர் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications