முதல்வர் ஸ்டாலினை எம்ஜிஆருடன் ஒப்பிடுவது தவறு.. ஜெயக்குமார் சொல்கிறார்
சென்னை: அதிமுக நிறுவனர் எம்ஜிஆருடன் மு.க.ஸ்டாலினை ஒப்பிடுவது நகைப்புக்குரியது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா அரசு சார்பில் சமூகநீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெரியாரின் 144வது பிறந்தநாளையொட்டி சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள பெரியாரின் உருவ சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் சந்தித்து கூறுகையில், மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின், ஆர்.எஸ்.பாரதி பல்வேறு விளக்கங்களையும் விமர்சனங்களையும் வைத்திருந்தார். ஆனான் ஆர்.எஸ்.பாரதியின் பதில்கள் அனைத்தும் பொறுப்பின்றி உள்ளது.

ஜெயக்குமார் பேட்டி
மின் கட்டணம் உயர்ந்தாலே, அனைத்து விலைவாசியும் உயரும். இதுபற்றி எவ்வித சிந்தனையும் இல்லாமல், மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். மின் கட்டணத்தை குறைக்கவில்லை என்றால், விலைவாசி உயர்ந்துகொண்டே தான் இருக்கும்.

விலைவாசி உயரும்
சொத்து வரி, குடிநீர் வரி, ஆவின் பொருள்கள் வரை என பல்வேறு விலைகளை உயர்த்தி இருக்கின்றனர். மக்கள் கஷ்டப்படுகின்றனர். மக்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ளாத அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

ஆர்.எஸ்.பாரதியின் பேச்சால் மகிழ்ச்சி
இதனைத்தொடர்ந்து அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் கரிஷ்மாட்டிக் தலைவர் என அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறிய கருத்து பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், கரிஷ்மாட்டிக் தலைவர் என்று எம்ஜிஆர்-ஐ சொன்னதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

எம்ஜிஆர் - ஸ்டாலின் ஒப்பீடு
ஆனால் எம்ஜிஆரின் அழகென்ன, நடை என்ன, ஸ்டைல் என்ன, அவர் நிச்சயம் கரீஷ்மாட்டிக் தலைவர் தான். ஆனால் எம்ஜிஆரை மு.க.ஸ்டாலினோடு ஒப்பிடுவது எந்த வகையில் நியாயம். எம்ஜிஆர்-உடன் ஸ்டாலினை ஒப்பிட்டு பேசுவது நகைப்புக்குறியது என்று தெரிவித்தார். தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பாக நேற்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications