ஆரம்பிச்சாச்சு.. ஜெயந்தி பத்மநாபனின் "ஹெலிகாப்டர் ஷாட்".. செம அதிரடி.. இது லிஸ்ட்டுலேயே இல்லையே!
சசிகலாவை வரவேற்க தயாராகிறார் ஜெயந்தி பத்மநாபன்
சென்னை: இதோ முதல் பிள்ளையார் சுழியை ஜெயந்தி போட்டுவிட்டார்.. சசிகலாவை 7-ம் தேதி வரவேற்கவும், ஹெலிகாப்டரில் பறந்து பறந்து அவர் மீது பூக்கள் தூவி வரவேற்கவும் அனுமதி வேண்டும் என்று கலெக்டரிடம் மனு தந்துள்ளார்.. குடியாத்தம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏதான் இந்த ஜெயந்தி பத்மநாபன்..!
Recommended Video
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தனி தொகுதி. 2016ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவை சேர்ந்த ஜெயந்தி பத்மநாபன் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்...
முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பூசலில் தினகரன் அணியில் இணைந்தார் ஜெயந்தி. இதற்காகவே இவரோடு சேர்த்து 18 எம்எல்ஏக்கள் பதவிகள் பறிக்கப்பட்டது.
போட்டி
இதற்கு பிறகு, குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தலில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயந்தி பத்மநாபன் அமமுக சார்பில் போட்டியிட்டார்.. ஆனால், எம்எல்ஏவாக இருந்தபோது ஜெயந்தி, அந்த தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என்ற ஒரு அதிருப்தி அப்போது இருந்தது..
சமாதானம்
அதனால் வாக்கு சேகரிக்க சென்றபோது, ஒருசில இடங்களில் அவரை ஊருக்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்திய சம்பவமும் நடந்தது... வாக்குவாதமும் முற்றி போலீஸே வந்து சமாதானம் செய்யும் நிலைமைகூட ஏற்பட்டது.. இதெல்லாம் பழைய விஷயம்தான்.. இப்போது ஜெயந்தி பற்றிய ஒரு புது தகவல் வெளிவந்துள்ளது.. இவர் பிப்ரவரி 3-ம் தேதி வேலூர் கலெக்டர் ஆபீசுக்கு சென்றுள்ளார்.. கலெக்டர் சண்முக சுந்தரத்திடம் ஒரு மனுவையும் தந்துள்ளார்.
வரவேற்பு
அதில், 'சசிகலா தமிழகம் வருவதை முன்னிட்டு, மாதனூர் அடுத்த கூத்தம்பாக்கத்தில் வரவேற்பு அளிக்கவுள்ளேன்.. அப்போது தனியார் வாடகை ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவி வரவேற்பு அளிக்க உள்ளேன்... அதற்காக பிப்ரவரி 7-ம் தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரை ஹெலிகாப்டர் பறக்க அனுமதி வழங்க வேண்டும்" என்று கேட்டு கடிதம் தந்துள்ளார். இப்படி ஒரு மனுவை பார்த்ததும் கலெக்டரே குழம்பிவிட்டார்..!
பாராட்டு
சசிகலா குறித்து எந்த கருத்தும், பாராட்டும் தெரிவிக்க கூடாது என ஏற்கனவே முதல்வர் தரப்பு வாய்மொழி உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருப்பதாக தகவல்கள் வந்த நிலையில், சசிகலாவை வரவேற்க அனுமதி வழங்கப்படுமா? மறுக்கப்படுமா என்று தெரியவில்லை. இந்நிலையில், இந்த கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கட்டும்? என முதல்வர் அலுவலகத்தில் கேட்டுள்ளாராம் கலெக்டர் சண்முகசுந்தரம்.
ஹெலிகாப்டர்
சொந்த கட்சியினருக்கு எடப்பாடியார் எவ்வளவு, எத்தகைய உத்தரவு வேண்டுமானாலும் பிறப்பிக்கலாம்.. ஆனால் மாற்று கட்சியை சேர்ந்தவர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றாலும், ஹெலிகாப்டரில் பறந்து பூ தூவி வரவேற்பதால் வேறு ஏதாவது சிக்கல் வருமா? சட்டம் ஒழுங்கு பாதிக்குமா? என்பதை பற்றியும் யோசித்து முடிவெடுப்பார்கள் என தெரிகிறது. ஆக, சசிகலாவை வானத்தில் இருந்தே பூ மழை தூவி வரவேற்க ஜெயந்தி முதல் படியை எடுத்து வைத்துவிட்டார்.. இனி ஒவ்வொருத்தராக கிளம்பி வருவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை..!