ஏப். 16-ல் அதிமுக அவசர செயற்குழு கூட்டம்! இந்த முறையாவது ரத்து செய்யாமல் நடக்குமா?
சென்னை: அதிமுக அவசர செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16-ந் தேதி நடைபெறும் என திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அண்மையில் பொறுப்பேற்றார். இதனையடுத்து சென்னையில் ஏப்ரல் 7-ந் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திடீரென மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் ஏப்ரல் 7-ந் தேதி அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஒரு சில காரணங்களுக்காக ஏப்ரல் 7-ந் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழுக் கூட்டமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் திடீரென அதிமுக அவசர செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16-ந் தேதி சென்னையில் நடைபெறும் என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா சட்டசபை தேர்தல் , அதிமுக உறுப்பினர் சேர்ப்பு ஆகியவை தொடர்பாக இந்த செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.
கர்நாடகா சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக 3 இடங்களில் போட்டியிட சீட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16-ந் தேதி கூட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கை: கர்நாடகா சட்டசபை பொதுத்தேர்தல் குறித்தும் உறுப்பினர்களை சேர்ப்பது சம்பந்தமாகவும் அதிமுக அவசர செயற்குழுக் கூட்டம் வரும் 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 1.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தாஇமையில் நடைபெறும்.

செயற்குழு உறுப்பினர்களான தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநில செயலாளர்கள், எம்பி, எம்.எல்.ஏக்கள், தலைமை செயற்குழு உறூப்பினர்கள் (மகளிர்) அனைவரும் உரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications