பாலியல் தொல்லை.. துடைப்பத்தால் அடிவாங்கிய அதிமுக நிர்வாகி கட்சியை விட்டு நீக்கம்.. எடப்பாடி உத்தரவு!
சென்னை: பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான குன்றத்தூர் மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பொன்னம்பலம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்பலம். இவர் அதிமுகவில் குன்றத்தூர் ஒன்றிய எம்ஜிஆர் அணி இணை செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இவரது தொல்லை தாங்காமல் அந்த பெண்கள் வேறு வீட்டுக்கு வாடகைக்கு சென்ற நிலையிலும் போனில் அழைத்து தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்கள், பொன்னம்பலத்தை துடைப்பத்தால் அடித்து வெளுத்துள்ளனர்.
பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசிலும் புகார் அளித்தனர். இதையடுத்து மணிமங்கலம் போலீசார் பொன்னம்பலத்தை கைது செய்து, அவர் மீது பெண் வன்கொடுமை சட்டம், பெண்களிடம் ஆபாசமாக பேசுதல், பெண்களை தாக்கியது உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், இளம்பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு துடைப்பத்தால் அடி வாங்கிய அதிமுக நிர்வாகி பொன்னம்பலம் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, எம்.பொன்னம்பலம் (குன்றத்தூர் மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications