உடையப் போகுது அதிமுக? விஜய்க்கு 37 எம்எல்ஏ ஆதரவு? சண்முகத்தின் எழுச்சி.. எடப்பாடியின் வீழ்ச்சி!
சென்னை: தமிழக அரசியலில் அதிமுகவின் எதிர்காலம் என்ன ஆகப் போகிறது என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கடுமையான பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், கட்சிக்குள் கலகம் உருவாகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் தனித்தனியாக நடைபெறும் ஆலோசனைகள், அதிமுக மீண்டும் பிளவை நோக்கி செல்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சிவி சண்முகம் தலைமையில் 37 எம்.எல்.ஏ.க்கள் விஜய்க்கு ஆதரவளிக்க தயராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. பல முக்கிய தொகுதிகளில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதோடு, சில இடங்களில் டெபாசிட் கூட பறிபோனது.

இந்த தோல்வி கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள் காரணமாக அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுகவில் நெருக்கடி
திமுக - அதிமுக இணைந்து புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கலாம் என்ற தகவல்களும் பரவின. ஆனால் அந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அதற்குப் பிறகே கட்சிக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள் வெடிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல எம்எல்ஏக்கள் நேரடியாகவே அதிமுகவின் தொடர் தோல்வி குறித்து கேள்வி எழுப்பியதாக தகவல்கள் வெளியாகின.
எடப்பாடி பழனிசாமி
கூட்டணி முடிவுகள், தேர்தல் வியூகம், கட்சியின் எதிர்காலம் உள்ளிட்ட பல விஷயங்களில் கடும் விவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த கூட்டம் முடிந்த சில மணி நேரங்களிலேயே, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தனது இல்லத்தில் தனியாக மற்றொரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது அரசியல் வட்டாரங்களில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. அந்த கூட்டத்தில் 37 எம்எல்ஏக்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
சி வி சண்முகம்
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர். மேலும் அமமுக எம்எல்ஏ காமராஜும் அந்த ஆலோசனையில் இருந்தது முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக சட்டமன்றத்தில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது.
தவெக அரசு
அதிலும் சி.வி.சண்முகம் தலைமையிலான தரப்பு, தவெக அரசுக்கு ஆதரவான முடிவை எடுக்கலாம் என்ற தகவல் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தவெக ஆட்சியை அமைக்க தேவையான எண்களை பெற்றிருந்தாலும், அதிமுகவில் இருந்து கூடுதல் ஆதரவு கிடைத்தால் அரசியல் நிலைமை முற்றிலும் மாறக்கூடும் என பார்க்கப்படுகிறது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் இருவரும் தொடர்ந்து தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருவது கட்சிக்குள் இரு அணிகள் உருவாகிவிட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
உடையும் அதிமுக
ஓ.பன்னீர்செல்வம் பிரிவுக்கு பிறகு மீண்டும் அதிமுக உடையும் சூழல் உருவாகிறதா என்ற விவாதமும் வலுத்துள்ளது. மறுபுறம், பாஜக கூட்டணியில் தொடர வேண்டுமா? அல்லது புதிய கூட்டணியை அமைக்க வேண்டுமா? என்ற கேள்வியிலும் கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. சில எம்எல்ஏக்கள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், அவர் பதவி விலகலாம் எனவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications