“அந்த ஒரு பந்திலேயே தெரிஞ்சு போச்சு.. சாகாவரம் கொண்ட படைத்தலைவன் தோனி”.. சிலாகித்த ஜெயக்குமார்!
சென்னை: "சாம்ராஜ்யங்கள் சரியலாம்.. சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை!" என சிஎஸ்கே அணி வீரர் தோனி பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றின் 68 வது ஆட்டத்தில் நேற்று பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழையப்போவது சிஎஸ்கேவா அல்லது ஆர்சிபியா என்பதை தீர்மானிக்கும் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த ஆட்டத்தில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 218 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி, 201 ரன்களை எட்டினால் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யலாம் என்ற இலக்குடன் களமிறங்கியது சி.எஸ்.கே அணி.
இலக்கைத் துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரச்சின் ரவீந்திரா அரைசதம் கடந்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிய தடுமாறியது சென்னை அணி. இறுதிக் கட்டத்தில் களமிறங்கிய மகேந்திர சிங் தோனி - ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் முதல் பந்திலேயே 110 மீ தொலைவுக்கு பந்தை பறக்கவிட்டு சிக்ஸர் விளாசினார் எம்.எஸ். தோனி. இருப்பினும் 20 ஓவர் முடிவில் சென்னை அணியால் 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று, ரன் ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றது.
புள்ளிப் பட்டியலில் 5வது இடம் பிடித்து ப்ளே - ஆஃப் வாய்ப்பில் இருந்து சிஎஸ்கே அணி வெளியேறியது. இந்நிலையில், தோனி மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள், சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். தோனியின் பிரமாண்ட சிக்சர் பற்றி ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.
கடைசி ஓவரின் முதல் பந்தில் தோனியின் அதிரிபுதிரி சிக்சர், ஆர்சிபி அணியினரை கலக்கத்தில் ஆழ்த்தியது என்றால் மிகையில்லை. அதேபோல, அடுத்த பந்தையும் சிக்சரை நோக்கி தூக்கியபோதுதான் கேட்ச் ஆனார் தோனி. அடுத்த 4 பந்துகளிலும் சிஎஸ்கே சொதப்ப, ப்ளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இந்த விறுவிறுப்பான ஆட்டம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். முன்னாள் பாக்சிங் விளையாட்டு வீரரும், தீவிர கிரிக்கெட் ரசிகருமான ஜெயக்குமார், தோனி பற்றி சிலாகித்து பதிவிட்டுள்ளார்.
"தோல்வியின் விளிம்பில் அணி இருக்கையில் வந்த தோனியை பார்த்தவுடன் இது தான் கடைசி போட்டி என்று உள்ளுக்குள் வருந்தினேன்! ஆனால் விக்கெட் ஆவதற்கு முன்பு ஒரு சிக்ஸர் வெளியே அடித்ததை பார்த்தவுடன் இவருக்கு ஓய்வு இல்லை என உறுதி செய்து விட்டேன்! சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! நன்றி தோனி!" என்று பதிவிட்டுள்ளார் ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications