ஒரு ஓட்டில் கவிழ்ந்த பாஜக ஆட்சி.. ஜெயலலிதா செய்தது வரலாற்றுப் பிழை.. கடம்பூர் ராஜூ பேச்சால் சலசலப்பு
தூத்துக்குடி: 1998ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியை கவிழ்த்தது ஜெயலலிதா செய்த வரலாற்றுப் பிழை என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார். பாஜகவின் ஆட்சியைக் கவிழ்த்ததால், திமுக கூட்டணி 14 ஆண்டுகள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் பங்கு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 1998ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்திருந்தது. இந்த கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்த நிலையில், ஜெயலலிதா முன்வைத்த கோரிக்கைகளை பாஜக அரசு நிறைவேற்றவில்லை. இதனால் கோபமடைந்த ஜெயலலிதா, பாஜக கூட்டணி அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.

இதனால் வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் கவிழ்ந்தது. இதனால் அதிமுக நீண்ட ஆண்டுகளாக மத்தியில் நடக்கும் ஆட்சியில் பங்கு கொள்ள முடியாமல் போனது. இதன்பின் பாஜகவுடன் கூட்டணி அமைத்து திமுக, ஆட்சியில் பங்கு கொண்டது. அதன்பின் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து 14 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இடம்பிடித்தது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக - பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், 1998அம் ஆண்டு பாஜக கூட்டணியில் அதிமுக இருந்தது. அப்போது நாங்கள் தவறு செய்துவிட்டோம்.
மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்துவிட்டு கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல, இடையில் வந்த சுப்பிரமணிய சுவாமி பேச்சைக் கேட்டு ஒரு ஓட்டில் பாஜகவை வீழ்த்தி வரலாற்றுப் பிழை செய்துவிட்டோம். அன்று பாஜக - திமுக கூட்டணி அமைந்ததன் காரணமாக, திமுக இன்று பொருளாதார வளர்ச்சியில் உள்ளது. பாஜக ஆட்சியை அதிமுக கவிழ்த்ததால் திமுக 14 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தது.
தமிழ்நாட்டில் திமுக வளர்வதற்கு பாஜகவே காரணம். மத்திய ஆட்சியில் கூட்டணி வகித்ததால் திமுகவிற்கு அதிகாரம் கொடுத்தது பாஜக தான். அதே பாஜகவை இன்று திமுக தீண்டத்தகாத கட்சியாகப் பார்க்கிறது. ஜெயலலிதா மட்டும் அந்த வரலாற்றுப் பிழையைச் செய்யாமல் இருந்திருந்தால், தற்போது திமுக என்ற கட்சியே இருந்திருக்காது என்று தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் முடிவை விமர்சித்து கடம்பூர் ராஜூ பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், கடம்பூர் ராஜூ கருத்து அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுக - பாஜக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதற்காகவும், தற்போதைய கூட்டணிக்காக இப்படிப் பேசுவது சரியா என்றும் அக்கட்சியின் தொண்டர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications