இதெல்லாம் இப்போ ஏன்? திண்டுக்கல் சீனிவாசன் செயலால் டென்ஷன் ஆன எடப்பாடி பழனிசாமி
சென்னை: ஜெயலலிதா பிறந்த நாள் விழா இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் அதிமுக அலுவலகத்திற்கு வந்து இருந்தனர். ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்த பிறகு, திண்டுக்கல் சீனிவாசன் புத்தகம் ஒன்றை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுக்க வந்தார். அப்போது இதெல்லாம் ஏன் என்ற தொனியில் மிகவும் கோபமாக எடப்பாடி பழனிசாமி அவரிடம் சைகை காட்டினார்.
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் மறைந்த பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் இன்று அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதா உருவ படத்திற்கு மாலையிட்டு இனிப்புகள் வழங்கி அவரது பிறந்த நாளை கொண்டாடினார்.

புத்தகம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்
கிராமங்கள், நகரங்கள் என பல்வேறு இடங்களிலும் அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாடினர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திலும், கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் குவிந்து இருந்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அங்கு கூடியிருந்த கட்சியினருக்கு இனிப்புகளையும் வழங்கினார். ஜெயலலிதா சிலைக்கு கட்சியின் மூத்த தலைவர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சரும் கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா புகைப்படத்தை முகப்பாக கொண்ட புத்தகம் ஒன்றை அளித்தார்.
முகம் மாறிய எடப்பாடி
இதை கவனித்த எடப்பாடி பழனிசாமி அதெல்லாம் வேண்டாம் என்று சொல்வது போல ரியாக்ட் செய்தார். ஆனாலும் திண்டுக்கல் சீனிவாசன் விடாமல் அந்த புத்தகத்தை வழங்க வந்ததால் சற்று முகம் மாறிய எடப்பாடி பழனிசாமி, புத்தகத்தை வாங்கி அருகில் இருந்த கேபி முனுசாமியிடம் ஒப்படைத்தார். திண்டுக்கல் சீனிவாசன் ஏதோ சொல்லவர அதையும் காதில் போட்டுக்கொள்ளாததை போல அங்கிருந்து சட்டென நகர தயாரானார். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதிமுகவில் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அதிகரித்துள்ள நிலையில், திண்டுக்கல் சீனிவாசனிடம் கோபப்படும் வகையில் எடப்பாடி பழனிசாமி நடந்து கொண்டதும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
77 கிலோ கேக்
முன்னதாக ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக அலுவலகம் இன்று களை கட்டியிருந்தது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் வாழை மரம், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. கொடி தோரணங்களும் கட்டப்பட்டு இருந்தன. எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்துக்கு வந்த போது அங்கு இருந்த தொண்டர்கள் புரட்சித் தலைவியின் புகழ் ஓங்குக, எடப்பாடி வாழ்க என கோஷங்களை எழுப்பினர்.
பின்னர், 77 கிலோ பிரமாண்ட கேக்கினை எடப்பாடி பழனிசாமி வெட்டினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கேக் வழங்கினார். பின்னர் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதிமுக சார்பு அணிகள் சார்பில் மருத்துவ முகாம், அன்னதானம் ஆகியவையும் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications