சொல்லியாச்சு.. நீங்கதான் ஜெயிப்பீங்க.. உங்களுக்குத்தான் ஓட்டு போடுவாங்க.. அதிமுக ஹேப்பி!
சென்னை: "வாங்க.. வாங்க.. வணக்கம்.. எல்லாம் சொல்லியாச்சு.. உங்களுக்குதான் ஓட்டு போடுவாங்க.. கண்டிப்பா ஜெயிப்பீங்க" என்று விஜயகாந்த் சொன்ன வார்த்தை அதிமுக காதில் தேன் வந்து பாய்வது போல இருந்திருக்கிறது!
எம்பி தேர்தல் தோல்விக்கு பிறகு தேமுதிகவை யாருமே கண்டுக்காமல் விட்டு விட்டதாக சொல்லப்பட்டது. சுதீஷூக்கு எவ்வளவோ எம்பி சீட்டுக்காக டெல்லி வரை முகாமிட்டும் ஒன்றும் சோபிக்கவில்லை. அதனால் தேமுதிக - அதிமுகவுக்குள் போதுமான நெருக்கம் இல்லையென்றும் தகவல்கள் வந்தன.
இந்த சமயத்தில்தான் 2 தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் அதிமுக தனக்கு சீட் கொடுக்காத அப்செட்டில் பாஜக உள்ளது. பாமகவும், தமாகாவும் "நாங்க இருக்கோம்" என்று கூட்டணி சார்பாக ஆதரவு சொல்லிவிட்டனர். ஆனால் தேமுதிக மட்டும் வாய் திறக்காமல் இருந்தது.
தலைமை
இது சம்பந்தமாக தேமுதிக தலைமை பாஜக தலைமையிடம் சொல்லி வருத்தப்பட்டதாகவும், பாஜக தலைமையும் அதிமுக தலைமையிடம் தேமுதிகவின் ஆதரவு நமக்கு எப்பவுமே தேவை என்பதை மறந்துவிடாதீர்கள் என்று சொன்னதாகவும் செய்திகள் கசிந்தன.
3 அமைச்சர்கள்
அதனால்தானோ என்னவோ, ஒரு குரூப்-ஆகவே அமைச்சர்கள் கிளம்பி விஜயகாந்த் வீட்டுக்கு சென்றுவிட்டனர். திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஜெயக்குமார் என்று அனைவருமே விஜயகாந்த் வீட்டுக்குள் நுழைந்தனர். வாங்க.. வாங்க.. வணக்கம் என்று விஜயகாந்த் வரவேற்று இருக்கிறார்.
சொல்லியாச்சு!
உடனே அமைச்சர்களும், விஜயகாந்துக்கு பொன்னாடையை போர்த்தி, உடல்நிலை எப்படி இருக்கிறது என்று விசாரித்து பேசினர். பிறகு இந்த முறையும் நாம் வெற்றி பெறணும்.. 2 தொகுதி தேர்தல்களிலும் ஆதரவு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அதற்கு விஜயகாந்த், "சொல்லியாச்சு.. உங்களுக்கு தான் ஓட்டு.. நீங்கதான் ஜெயிப்பீங்க" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிமுக அமைச்சர்களுக்கு புல்லரித்து விட்டதாம்.
ஆதரவு
இதையடுத்துததான், விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்திலும், "தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்புகொண்டு நடைபெறவிருக்கும் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரினார். அமைச்சர்களும் நேரில் சந்தித்து ஆதரவு கோரினர்" என்று பதிவிட்டார்.
பிரச்சாரம்?
ஆக மொத்தம் பாஜக தவிர.. கூட்டணி கட்சியினர் அதிமுகவுக்கு ஆதரவு தந்துவிட்டனர். இப்போதைக்கு போதிய செல்வாக்கு தேமுதிகவுக்கு இல்லாவிட்டாலும், அதன்மூலம் கிடைக்கும் ஓரளவு ஓட்டு கூட அதிமுகவுக்கு மிக மிக முக்கியமானதாக உள்ளது. அதனால்தான் முதல்வர் போனிலும், அமைச்சர்கள் நேரிலும் சென்று ஆதரவு கேட்டுள்ளனர். ஆனால், ஆதரவை தேமுதிக எப்படி தர போகிறது? பிரச்சார பீரங்கியான பிரேமலதா வாக்கு சேகரிப்பாரா? அல்லது விஜய பிரபாகரன் வாக்கு சேகரிக்க வருவாரா என்றுதான் தெரியவில்லை!