கரசேவைக்கு செல்லுங்கள் என கட்டளையிட்டவர் ஜெயலலிதா.. அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி
சென்னை: முதல்வராக இருந்த போதே கரசேவைக்கு செல்லுங்கள் என கட்டளையிட்டவர் ஜெயலலிதா. ராமர் கோவில் திருக்கோவிலில் அரசியல் பேசுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுடைய நிலைப்பாடு ஜெயலலிதா காலத்தில் இருந்த நிலைப்பாடுதான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கேபி முனுசாமி கூறியதாவது:- தொழில் முனைவோர் மாநாடு நடத்துகிற போது எல்லா மாநாட்டிலும் நடைபெறும் மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு தொழில்முனைவோர்களை அழைத்து இங்கெல்லாம் நீங்கள் முதலீடுகளை ஆரம்பியுங்கள்.. பாதுகாப்பான மாநிலம் என்று சொல்லியிருந்தால்.. நான் உண்மையாகவே அண்ணாமலை சொன்னதை வரவேற்று இருப்பேன்.

மாறாக குஜரத்திற்கு சென்று பிரதமர் மோடி அங்கே உட்கார்ந்து கொண்டு தொழில் முனைவோரை அழைத்து பேசி அனுப்புகிறார். அப்படி என்றால் ஒரு நாட்டின் பிரதமர் கூட அவர் பிறந்த மண் என்ற சிறிய வட்டத்திற்குள் சென்றுவிடுகிறார். அப்படி இருக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டை பற்றி விமர்சிக்கும் எந்த வித தார்மீக உரிமையும் அண்ணாமலைக்கு இல்லை.
மத்திய அரசே பாராட்டு பத்திரம்: திராவிட கட்சிகள் ஆட்சி பொறுப்பில் இருந்த 50 ஆண்டு காலங்கள்... குறிப்பாக அதிமுக ஆட்சியில் இருந்த போதுதான் தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக விளங்கியிருக்கிறது. அண்ணாமலை சொல்லும் பாஜக ஆட்சியில் சிறந்த மாநிலம் என்று எல்லாதுறையிலும் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்பதை மத்திய அரசே அழைத்து வந்து பாராட்டு பத்திரம் வழங்கிக் கொண்டு இருக்கிறது.
அதை மறைத்து இங்கு தான் தோன்றித்தனமாக வருகின்ற இடத்தில் எல்லாம் எதையோ ஒன்று சொல்லி.. இங்கு இருக்கும் அரசியல் வாதிகளை விமர்சனம் செய்து செல்வது என்பது.. ஒரு நாகரீகமான அரசியல் இல்லை. அண்ணாமலை இப்போதுதான் வந்து இருக்கிறார். காமராஜரோ தற்காலை தலைவர்களை மோடி உள்பட யாரையும் காமராஜருடன் ஒப்பிட்டு பேச முடியாது. அவர் மிகப்பெரிய கர்ம வீரர்.
கரசேவைக்கு செல்லுங்கள்: மக்களுக்காகவே வாழ்ந்தவர்.. மக்களுக்காகவே தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தவர். சுதந்திர காலத்தில் இருந்து வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக வாழ்ந்தவர் காமராஜர். எனவே மறைந்த தலைவருடன் இன்று இருக்கும் தலைவர்களை ஒப்பிடுவதை சரியாக இருக்காது என நினைக்கிறேன். முதல்வராக இருந்த போதே கரசேவைக்கு செல்லுங்கள் என கட்டளையிட்டவர் ஜெயலலிதா. ராமர் கோவில் திருப்பணிக்கு எங்கள் தலைவர் முழு ஆதரவை தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியும் உடல் நலம் குறைவாக உள்ளது. சற்று உடல்நலம் தேறினால் கலந்து கொள்வேன் என்று கூறியிருக்கிறார். ராமர் கோவில் திருக்கோவிலில் அரசியல் பேசுவதை நாங்கள் விரும்பவில்லை. தேர்தலை முன்னிறுத்தி காங்கிரஸ் பாஜகவை எதிர்க்கும் வகையில் இது ஒரு காரணமாக எடுத்து சொல்கிறது. எங்களுடைய நிலைப்பாடு ஜெயலலிதா காலத்தில் இருந்த நிலைப்பாடுதான்" என்றார்.












Click it and Unblock the Notifications