முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு மக்கள் அங்கீகாரம்-புதிய தலைமுறை சர்வேயால் மகிழ்ச்சியில் அதிமுக
சென்னை: புதிய தலைமுறை தொலைக்காட்சியின் கருத்து கணிப்பில் திமுகவுக்கு 151 முதல் 158 இடங்களும் அதிமுகவுக்கு 76-83 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் இந்த கருத்து கணிப்பின் பல அம்சங்கள் முதல்வர் எடப்பாடியார் தலைமைக்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறது என மகிழ்கின்றனர் அதிமுகவினர்.
புதிய தலைமுறை டிவியானது பல்வேறு அம்சங்களில் கருத்து கணிப்பு நடத்தியது. அதில் எந்த பிரச்சனை உங்களது வாக்களிக்கும் முடிவை தீர்மானிக்கும் என்கிற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.

ஈபிஎஸ் ஆட்சி மீது அதிருப்தி இல்லை
அதில் வேலை இழப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் ஆட்சி மாற்றம் என்கிற ஆப்சனும் இடம்பெற்றிருந்தது. ஆனால் விலைவாசி உயர்வைத்தான் மக்கள் அதிகமான தேர்வாகவும் ஆட்சி மாற்றம் என்பதை 5-வது ஆப்சனாகவும்தான் வைத்திருக்கின்றனர். அதாவது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது பெரிய அளவில் அதிருப்தி இல்லை என்பதை இக்கருத்து கணிப்பு சொல்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது அதிமுக.

ஆட்சிக்கு எதிரான நிலை இல்லை
அதேபோல் மேலும் சில விஷயங்களையும் அதிமுகவினர் சுட்டிக்காட்டுகின்றனர். வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற உதவும் என்கிற கேள்வியில் கூட ஈபிஎஸ் ஆட்சிக்கு எதிரான மனநிலை என்கிற ஒரு ஆப்சனும் இடம்பெற்றது. அதில் ஸ்டாலின் தலைமைக்காகவே 37.96% திமுகவுக்கு வாக்களிக்கிறோம் என்றுதான் கூறியுள்ளனர். ஈபிஎஸ் ஆட்சிக்கு எதிரான மனநிலை என்பதை வெறும் 6.72% பேர் தான் சொல்லி இருக்கின்றனர்.

முதல்வருக்கும் ஆதரவு
அடுத்த முதல்வராக யார் வரவேண்டும் என்ற போட்டியில் ஸ்டாலினுக்கு 37.51% பேரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்க 28.33% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் அனைவரும் சிங்கிள் டிஜிட்டில்தான் ஆதரவு பெற்றுள்ளனர். இதே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற நாள் முதல் இன்று வரை எத்தனையோ கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டும் வருகின்றன. ஆனால் இந்த விமர்சனங்கள் மிகப் பெரிய தாக்கத்தை தரவில்லை என்பதை சொல்கிறது இக்கருத்து கணிப்பு

மகிழ்ச்சியில் அதிமுக
சசிகலா விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி எடுத்த நிலைப்பாடு சரிதான் என்பதை இக்கருத்து கணிப்பும் வெளிப்படுத்துகிறது. சசிகலா மீண்டும் அதிமுக பொதுச்செயலாளராவதை ஆதரிக்கவில்லை என 45.64% பேர் கூறியிருக்கின்றனர். சசிகலா அண்ட்கோவுக்கு எடப்பாடியார் செக் வைத்தது சரியான நடவடிக்கை என்பதை ஆமோதிக்கிறது இக்கருத்து கணிப்பு. இப்படியான பல்வேறு அம்சங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு அங்கீகாரம் தரும் வகையில் இந்த கருத்து கணிப்பில் இடம்பெற்றுள்ளதாக கூறி மகிழ்கின்றனர் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications