பஞ்ச் பேசியும் பஞ்சரான அதிமுக.. வாக்கு சதவீதம் ஓகே! ஆனா வெறும் 8 தொகுதியில் தான் டாப்..விவரம் இதோ!
சென்னை: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தோல்வியடைந்தது. இந்நிலையில் சட்டமன்ற தொகுதி வாரியாக அக்கட்சி பெற்ற வாக்குகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே அதிமுக அதிக வாக்குகளை பெற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது.
லோக்சபா தேர்தலின் முடிவுகள் ஜூன் 4ம் தேதியன்று வெளியாகின. இதில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றன. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக பல இடங்களில் 3ம் இடத்திற்கு சென்றது. பாஜக இந்த தொகுதிகளில் இரண்டாவது இடத்தை பிடித்தது.

இப்படி இருக்கையில் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சி அதிகார பலம், பணத்தை வைத்து பல கட்சிகள் பிரசாரம் செய்தன. அதிமுக சார்பில் நான் மட்டுமே பிரசாரம் செய்தேன் என்றும், 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை விட 2024-ம் ஆண்டு தேர்தலில் 1% வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளோம். இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி என்றும் தோல்விக்கான காரணத்தையும், கட்சியின் தற்போதைய நிலையையும் விளக்கியிருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பெற்ற வாக்குகள் எவ்வளவு என்கிற விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கட்சி பலமாக இருப்பதாக கருதப்பட்ட மேற்கு மண்டலத்தில் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. குறிப்பாக எடப்பாடி, குமாரபாளையம், கங்ககிரி, பரமத்திவேலூர், திருக்கோவிலூர், அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் உளுந்தூர்பேட்டை என வெறும் 8 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே அதிமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றன.
மறுபுறம் பலம்வாய்ந்த தொகுதிகளாக கருதப்பட்ட கோவை, ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக அதிக வாக்குகளை பெறவில்லை. குறிப்பாக சென்னையில் உள்ள எந்த தொகுதிகளிலும் அதிமுக அதிக வாக்குகளை பெறவில்லை.
மறுபுறம் தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற திமுக மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 221 தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது. வடமாவட்டங்களான திருவள்ளூர், அரக்கோணம் மத்திய மாவட்டங்களான பெரம்பலூர், கரூர், திருச்சி கொங்கு மண்டலமான கோவை, நாமக்கல், நீலகிரி, தென் மாவட்டங்களான மதுரை, தென்காசி, தூத்துக்குடி ஆகியவற்றில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் திமுக வழக்கத்தை விட அதிக வாக்குகளை பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
தேமுதிகவுக்கு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மட்டுமே அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அதேபோல, பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமகவுக்கு, தருமபுரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி என 3 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றன. பாமக மொத்தமாக 10 லோக்சபா தொகுதிகளில் களம் இறங்கியது. இதில் 60 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன.
பாஜகவை பொறுத்தவரை மொத்தமுள்ள 234 தொகுதிகளில் ஒன்றில் கூட அதிக வாக்குகளை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications