பிரிந்தவர்கள் மீண்டும் வாருங்கள்.. அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அழைப்பு
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தினகரன் கோஷ்டியில் இருந்து விலகி திமுக அணியில் கைகோர்க்க இருக்கும் சூழலில், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் "சில சூழ்நிலைகளால் நாம் பிரிந்தாலும், தாய் கழகத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்பும் அனைத்து தகவல் தொழில்நுட்பப் பிரிவு (ம) சமூகவலைதள நண்பர்கள் அனைவரையும் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு அன்போடு இருகரம் நீட்டி வரவேற்கிறது" என பதிவிட்டிருப்பது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் முதன்முறையாக தகவல் தொழில்நுட்பபிரிவு என்ற புது யுக்தியை கையாண்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரது வழியில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயல்பட்டு வருகிறது.
வருகின்ற லோக்சபா தேர்தல் மற்றும் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களை சந்திப்பதற்கு தேவையான அனைத்து யுக்திகளையும் கையாண்டு தயார் நிலைப்படுத்தி வருகிறது.
இதற்கென கார்பரேட் அலுவலகத்தை போல் தனி அலுவலகம் அமைத்து பல்வேறு யுக்திகளுடன் செயல்பட்டும் வருகிறது.
அதில் ஒரு பகுதியாக தொகுதி வாரியாக whats app மூலம் மக்களை இணைப்பது, செல்வாக்கு நிறைந்த, செல்வாக்கு குறைந்த பகுதிகள் பற்றிய தகவல் சேகரிப்பது, பூத் வாரியாக வகைபடுத்தி கழக தகவல்களை கணக்கெடுத்து தலைமையிடம் கொடுப்பதற்கான செயலையும் செய்து வருகிறது என மக்களிடையே பரவலாக பேசப்படுகிறது.
சில சூழ்நிலைகளால் நாம் பிரிந்தாலும், இன்று மீண்டும் தாய் கழகத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்பும் அனைத்து தகவல் தொழில்நுட்பப் பிரிவு (ம) சமூகவலைதள நண்பர்கள் அனைவரையும் அன்போடு இருகரம் நீட்டி வரவேற்கிறது கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு. #WelcomeBackFriends
— Singai GRamachandran (@RamaAIADMK) December 13, 2018
இவ்வாறு சென்று கொண்டிருக்கும் நிலையில் தான், தினகரன் அணியில் அதிருப்தி நிலையில் இருப்போரும், தினகரன் அணியை விட்டு விலகி இருப்போரும் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் தங்களை இணைத்து கொள்ள தொடந்து வந்த வண்ணம் இருப்பதாக தகவல்கள் வெளியாகிருக்கிறது.
இதற்கு செவி சாய்க்கும் விதமாக தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளரும் ட்விட்டரில் ஒரு நேர்மறையான கருத்தை தெரிவித்து கழக பணியாற்ற அனைவரையும் அழைத்துள்ளார்.
எதிர்கால அரசியலை தகவல் தொழில்நுட்பமும் விஞ்ஞான வளர்ச்சியும் தான் தீர்மானிக்கும் என்ற நிலையில் இப்படியொரு பரபரப்பான சூழ்நிலை உருவாகி இருப்பதற்கு வருகின்ற தேர்தல் தான் தக்க முடிவைத் தரும்.