அதிமுக குடுமி விஜய் கையில்? அதிமுக குழு தலைவர் யார்? SPV Vs EPS! என்ன முடிவெடுப்பார் சபாநாயகர்?
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று நடக்கவிருக்கும் தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அதைவிட பெரிய சிக்கலாக தற்போது அதிமுகவின் உள்கட்சி மோதல் மாறியுள்ளது. சட்டமன்றத்தில் அதிமுகவின் உண்மையான தலைவர் யார் என்ற கேள்வியே தற்போது மிகப்பெரிய அரசியல் விவாதமாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் சபாநாயகர் எடுக்கப்போகும் முடிவு, அதிமுகவின் தலையெழுத்தை தீர்மானிக்கக்கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த பல தசாப்தங்களாக ஆளும் கட்சி அல்லது பிரதான எதிர்க்கட்சி என்ற நிலையை தக்கவைத்திருந்த அதிமுக, தற்போது மூன்றாவது பெரிய கட்சியாக தள்ளப்பட்டுள்ளது.

இந்த தோல்விக்குப் பிறகு கட்சிக்குள் அதிருப்தி வெடிக்கத் தொடங்கியது. ஒருபுறம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி இருக்க, மறுபுறம் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான அணி தனியாக செயல்பட ஆரம்பித்துள்ளது.
அதிமுக பிளவு
இந்த இரு தரப்பும் தற்போது சட்டமன்றக் கட்சி தலைவர் யார் என்பதில் நேரடியாக மோதிக்கொண்டுள்ளன.
இந்த நிலையில், சட்டமன்றக் கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியே தொடர வேண்டும் என்று ஒரு தரப்பு சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளது. அதே நேரத்தில், பெரும்பான்மையான உறுப்பினர்கள் தங்களுக்கு ஆதரவாக உள்ளனர் என்று கூறி எஸ்.பி. வேலுமணி தரப்பும் தனியாக கடிதம் அளித்துள்ளது. இங்கேயே மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், இரண்டு தரப்பும் தங்களிடம் பெரும்பான்மை உறுப்பினர்கள் உள்ளனர் என்று கூறுகின்றன.
அதிமுக சட்டமன்ற குழு தலைவர்
இரு கடிதங்களிலும் பல எம்எல்ஏக்களின் கையெழுத்துகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உண்மையில் சட்டமன்றத்தில் அதிமுகவை வழிநடத்தப்போவது யார் என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய சூழலில் சபாநாயகர் உள்ளார். இந்த விவகாரத்தில் சபாநாயகரின் அதிகாரம் மிகவும் முக்கியமானது. சட்டமன்றக் கட்சி தலைவர் மற்றும் கொறடாவை அங்கீகரிப்பது அவருடைய அதிகார வரம்புக்குள் வருகிறது. அவர் யாரை அங்கீகரிக்கிறாரோ, அந்த தரப்பின் உத்தரவே சட்டமன்றத்தில் செல்லுபடியாகும்.
எடப்பாடி பழனிசாமி
இதில்தான் தற்போது அரசியல் கணக்குகள் அனைத்தும் சிக்கியுள்ளன. ஒருவேளை சபாநாயகர் எடப்பாடி பழனிசாமி தரப்பை அங்கீகரித்தால், அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கொறடா உத்தரவுப்படி தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய நிலை வரும். அதை மீறி யாராவது தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தால், அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாயும் அபாயம் உருவாகலாம். ஆனால், சபாநாயகர் வேலுமணி தரப்பை அங்கீகரித்தால் நிலைமையே தலைகீழாக மாறும்.
எஸ்பி வேலுமணி
அந்த அணியில் உள்ள உறுப்பினர்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கலாம். அப்போது அதனை தடுக்க பழனிசாமி தரப்பால் முடியாது. இதற்கிடையே இன்னொரு முக்கியமான சட்ட அம்சமும் பேசப்படுகிறது. அதாவது, அதிமுக உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் ஒன்றிணைந்து வேறு நிலைப்பாடு எடுத்தால், அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் அமலாகாது என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது வேலுமணி தரப்பில் 30-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருப்பதாக கூறப்படுவதால், இதுவும் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
உச்சநீதிமன்றம்
மேலும், சபாநாயகர் இந்த விவகாரத்தில் உடனடியாக முடிவு எடுக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. அவர் விரும்பினால் முடிவை தள்ளிப்போடலாம். ஆனால் நீண்ட காலம் முடிவெடுக்காமல் இருக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே பல வழக்குகளில் "நியாயமான காலத்திற்குள்" சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சபாநாயகர் முடிவு
இதனால், இன்று சபாநாயகர் எடுக்கப்போகும் முடிவு வெறும் சட்டமன்ற நடைமுறை முடிவாக மட்டும் பார்க்கப்படவில்லை. அது நாளைய அதிமுகவின் தலைமை யார் என்பதை தீர்மானிக்கக்கூடிய அரசியல் திருப்பமாக மாறியுள்ளது. தற்போதைய சூழலில் தவெக அரசின் எதிர்காலத்தை விட, அதிமுகவின் எதிர்காலமே அதிக கேள்விக்குறியாக மாறியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications