எடப்பாடி ஆட்சியில் ஓட்டைனு விஜய் சொல்லியும்..! "Nice Speech" முதல்வரை பாராட்டிய எஸ்.பி.வேலுமணி!
சென்னை: தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்த புகார்களுக்கு பதில் அளித்து முதல்வர் விஜய் பேசியதை அதிமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கு முதல்வர் விஜய் இன்று பதிலளித்தார். அப்போது அவர் டாஸ்மாக்கில் கட்சி நிதி என கூறியதற்கு திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். ஒருமையிலும் பேசினர்.

இதற்கு தவெக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ஒருமையில் பேசிய வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்குமாறும் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து திமுகவினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதைத் தொடர்ந்து விஜய் தனது பேச்சை தொடர்கையில், முதல்வருக்கு பேசத் தெரியவில்லை. பதிலளிக்கத் தெரியவில்லை என கூறுபவர்கள் பதிலளிக்கும் போது அதனைக் கேட்காமல் வெளியேறிவிடுகின்றனர்.
மக்களுக்குத் தேவையான பயன்படக் கூடிய ஆக்கப்பூர்வமான கருத்துகளையோ ஆக்கப்பூர்வமான யோசனைகளோ இருந்தால் பேசுங்கள். அதனை தவெக அரசு கண்டிப்பாக ஏற்கும். அதையெல்லாம் விட்டுவிட்டு நக்கல், நையாண்டி, சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஏதேதோ பேசுவதையெல்லாம் விட்டுவிடுங்கள்.
தவெகவைப் பற்றி அவதூறு பரப்புவதை மட்டுமல்லாமல் மக்கள் மீதும் அவதூறு பரப்புகிறார்கள். மக்கள் தவெகவிற்கு வாக்களித்தது தவறு! குடும்பம் குடும்பமாக ஆதரித்தது தவறு என திமுகவினர் தொடர்ந்து மக்களை சாடி வருகிறார்கள்.
இது எம்ஜிஆர் காலத்திலும் இருந்தது. திமுகவினர் 50 ஆண்டுகளாக ஒரே டெக்னிக்கை வைத்து விமர்சித்து வருகிறார்கள். டெக்னாலஜி எல்லாம் மாறிவிட்டு. டெக்னிக்கையாவது மாற்றிக் கொள்ளுங்கள்.
பார்ட்டி ஃபண்ட் என்று இல்லை, மக்களின் பணத்தை நாங்கள் தொடமாட்டோம். தொட்டவர்களையும் விடமாட்டோம் என விஜய் எச்சரித்தார். விஜய்யின் உரை முடிந்ததும் அவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்திருந்தார்.
சட்டசபையில் விஜய் முதல் முறையாக பேசிய பேச்சுக்கள் வைரலாகி வரும் நிலையில் முதல்வர் விஜய்யை தனியே சந்தித்த அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி வாழ்த்து தெரிவித்தார். பதிலுரை முடிந்து சட்டசபையில் இருந்து வெளியே விஜய் வருகை தரும் வழியில் வேலுமணி காத்திருந்தார். இதையடுத்து விஜய் வந்ததும் கை கொடுத்து உங்கள் பேச்சு நன்றாக இருந்தது (Nice Speech) என பாராட்டினார்.
விஜய் தனது பதிலுரையில் பேசுகையில், 2017 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தை ஆண்ட புண்ணியவான்கள் நிர்வாகத்தில் ஓட்டை போட்டுவிட்டனர். அதை சரி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலத்தையும் விமர்சித்து பேசியிருந்தார். இந்த நிலையில் விஜய்க்கு எஸ்.பி.வேலுமணி பாராட்டு தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications