பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி அறையில் திரண்ட அதிமுக எம்.எல்.ஏக்கள்.. அவசர ஆலோசனை!
சென்னை: சட்டப்பேரவையில் தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில், அதற்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தமிழக சட்டப்பேரவையில் தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில், 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இதனையடுத்து வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நாளை (மார்ச் 15) தாக்கல் செய்யவுள்ளார்.

மேலும் 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கை, கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கை ஆகியவை மார்ச் மாதம் 21ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் தொடர்பான காட்சிகளை 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இதற்கிடையே, 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு பொருளாதார அறிக்கையைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டார். பொருளாதார ஆய்வு அறிக்கையைத் தமிழக அரசு வெளியிடுவது இதுவே முதல்முறை.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக எம்.ஏல்.ஏ.க்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கூட்டமானது சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அறையில் நடைபெறுகிறது.
பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications