ஏன் இப்படி இருக்காங்க.. இதெல்லாம் தேவையா.. பேசாம இணைஞ்சுடலாமே.. அதிமுக, அமமுகவில் குமுறல்
தகுதி நீக்க நடவடிக்கை தேவையா என அதிமுக எம்எல்ஏக்கள் புலம்புகிறார்கள்.
Recommended Video
சென்னை: "ஏன் இப்படி எல்லாம் நடக்குது.. இவங்க ரெண்டு தரப்பும் ஏன் இப்படி இருக்காங்க? அதிமுக, அமமுக ரெண்டுமே சேர்ந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்?" என்பதுதான் பெரும்பாலான அதிமுக எம்எல்ஏக்களின் உள்ளக் குமுறலாக இருக்கிறது.
2 நாட்களாக அதிமுக-அமமுக தரப்பில் நடந்து வரும் சமாச்சாரங்கள்தான் எல்லோருக்கும் பெரிய குழப்பத்தையும், தேவையில்லாத சங்கடங்களையும் ஏற்படுத்தி வருகிறது.
சபாநாயகர் தனபாலிடம் சட்டமன்ற கொறடா ராஜேந்திரன் கொடுத்த மனுவின்படி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

உரிமை கோரும் வழக்கு
அமமுகவை கலைத்து கட்சியாக ஆணையத்தில் பதிவு செய்து அங்கீகாரம் கிடைக்க தினகரன் நடவடிக்கை எடுத்தார். அடுத்ததாக, அதிமுக உரிமை கோரும் வழக்கு, இரட்டை இலை சின்னம் மேல்முறையீடு என அடுத்தடுத்த மூவ்களை பார்த்து அதிமுக அரண்டுவிட்டதா என தெரியவில்லை.

கையில் ஆட்சி
நேற்று இப்படி ஒரு அதிரடியை 3 பேர் மீது எடுத்துள்ளது. இது இதோடு மட்டும் நிற்காது என தெரிகிறது. இதுபோன்று இன்னும் அடுத்தடுத்த விஷயங்களை ஆட்சி அதிகாரத்தில் உள்ள அதிமுகவும் கையில் எடுக்கவே செய்யும்!

தீவிர விசுவாசிகள்
ஆனால் இதை எல்லாம் பார்த்து கொண்டிருக்கும் பெரும்பாலான அதிமுக எம்எல்ஏக்கள் கவலை அடைந்துள்ளார்களாம். இவர்கள் எடப்பாடி பழனிசாமி, தினகரன் என்ற கோணத்தில் இதை அணுகி பார்க்கவில்லை. இப்படி புலம்புபவர்கள் முழுக்க முழுக்க எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளாக இருப்பவர்கள். அதனால்தான் இரண்டு தரப்பும் முட்டி மோதி கொள்வதை விரும்பவே இல்லை.

இடைத்தேர்தல்
"எதுக்காக இப்படி ரெண்டு பேரும் சண்டை போட்டு விரிசலை அதிகமாக்கி வருகிறார்கள்? எம்பி தேர்தல் எப்படியோ தெரியாது, ஆனால் இடைத்தேர்தல் முடிவுகள் எப்படியும் சொல்லிக் கொள்கிற மாதிரி இருக்காது. இதையெல்லாம் பார்த்து கொஞ்சம் அனுசரித்து அதிமுக தலைமை போனால் நல்லா இருக்குமே?

அம்மா ஆட்சி
இப்போதைக்கு இந்த 3 பேர் தகுதி நீக்க நடவடிக்கை எல்லாம் தேவையா? எங்களுக்கு இதெல்லாம் பிடிக்கலை. ரெண்டு பேரும் சேர்ந்தால் அம்மாவின் ஆட்சியை காப்பாற்றலாம். யதார்த்தத்தை புரிந்து கொள்வார்களா என்றுதான் தெரியவில்லை" என்று புலம்பி தள்ளுகிறார்களாம்.

கரையும் கட்சி
உண்மையிலேயே ஓபிஎஸ்-இபிஎஸ் என்ற இரு ஜாம்பவான்களை தவிர பெரும்பாலான எம்எல்ஏக்களும், நிர்வாகிகளுக்கும் தினகரன் மீது அப்படி என்ன காழ்ப்புணர்ச்சி இருக்க போகிறது? அவர்களுக்கும் தினகரனுக்கும் சம்பந்தம் ஒன்றும் இல்லைதான். அதனால் அதிமுகவில் உள்ள ஒரு சிலரது நன்மைக்காக ஒரு கட்சியே கரைந்து காணாமல் போய்க் கொண்டிருப்பது உண்மைதான்!












Click it and Unblock the Notifications