நாடகம் விடும் வேளை தான்.. பனையூருக்கு பறந்த அதிமுக எம்எல்ஏக்கள்! விஜய்க்கு லட்டு போல வரும் வாய்ப்பு
சென்னை: பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் தமிழக அரசியல் களம் சென்று கொண்டிருக்கிறது. ஆட்சி அமைக்க தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவை பெற விஜய் முயன்று கொண்டிருக்கும் நிலையில், அதிமுக உடையும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் அதிமுகவில் புரட்சி படை ஒன்று உருவாகி இருக்கும் நிலையில், அவர் இன்று பனையூரில் விஜயை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோரும் செல்ல இருப்பதாக சொல்கின்றனர் அதிமுகவினர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் இன்னும் சூசற்று சூடாகவே இருக்கிறது. 234 தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்தத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆனால் ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற பெரும்பான்மை எட்டப்படாததால், கூட்டணி அரசியல் தவிர்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த சூழலில், கட்சித் தலைவர் விஜய் பிற கட்சிகளின் ஆதரவைப் பெற முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளார்.

காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுடன் விஜய் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் காங்கிரஸ் ஆதரவு தருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இது ஒரு புறம் இருக்க திடீரென அதிமுகவில் கலவரம் வெடித்திருக்கிறது. திமுக எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் இருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் விஜயை ஆதரிக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். இதனால் அதிமுக உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று ஒரு தரப்பும் ஆதரவு தரக்கூடாது என்று ஒரு தரப்பும் அதிமுகவில் போர்க்கொடி தூக்கி உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் பொறுப்பேற்றதிலிருந்து அக்கட்சி தோல்வியை மட்டுமே சந்தித்து வரும் நிலையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தற்பொழுது அவருக்கு எதிராக நிற்கத் தொடங்கியுள்ளனர்.
வழக்கம்போல் இந்த கலவரத்தை ஏற்படுத்தி இருப்பவர் முன்னாள் அமைச்சர் ஆன சிவி சண்முகம். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சந்தித்த 10 தேர்தல்களில் தோல்வியை சந்தித்திருக்கும் நிலையில் இனியும் அவரை நம்ப முடியாது, தலைமையில் மாற்ற வேண்டும். குறிப்பாக, இந்த முறை ஆட்சியில் பங்கெடுக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. நேற்று வரை அமைதியாக இருந்த சிவி சண்முகம் இன்று திடீரென தனது ஆதரவாளர்களை சந்திக்க தொடங்கினார்.
மேலும் சில எம்எல்ஏக்களும் அவரை சந்தித்தது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இன்று நடைபெற இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டமும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே எடப்பாடி பழனிச்சாமி தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான எஸ்பி வேலுமணியும், கே சி கருப்பண்ணனும், சிவி சண்முகத்தை சந்தித்து பேசியது பரபரப்பை மேலும் அதிகரித்தது. இவர்கள் அனைவருமே அதிமுக எம்எல்ஏக்களை ஆதரவாளர்களாக வைத்திருக்கும் நிலையில் ஒன்றாக சேர்ந்து விஜயை ஆதரிக்கலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் கூட்டம் முடிந்ததும் சிவி சண்முகம் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் ஒரே காரில் புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் தான் அவர்கள் பனையூர் நோக்கி செல்ல இருப்பதும், நடிகர் விஜய்யை சந்தித்து பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர் செல்வத்திற்கு பிறகு அதிமுக மீண்டும் உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் கட்சி உடைவதை தவிர்க்க விஜய்க்கு ஆதரவு தெரிவித்து விடலாம் என ஒரு சில எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி இடம் பேசுவதாகவும் சொல்லப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி என்ன முடிவெடுக்க போகிறார் என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.














Click it and Unblock the Notifications