கள்ளக்குறிச்சி.. தொடர் கோஷம்.. அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபை கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட்
சென்னை: தமிழக சட்டசபையின் 6வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இதில் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கள்ளச்சாராய பலி தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோஷமிட்டதால் சபாநாயகர் அப்பாவு உத்தரவை தொடர்ந்து கூண்டோடு சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். மேலும் அவர்கள் இந்த சட்டசபை தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக கடந்த 20ம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட துறைகள் வாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடத்தப்பட்டு புதிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி இன்றும் பல்வேறு துறைகளின் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.
அதாவது சட்டசபையின் 6வது நாள் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் திட்டம் ,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறையில் 1. மாநில சட்டசமன்றம், 2. ஆளுநர் மற்றும் அமைச்சர்வை, எரிசக்தி துறை, நிதித்துறை, மனித வள மேலாண்மை துறை, ஓய்வூதியங்களும், ஓய்வுக்கால நன்மைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற உள்ளது.
அதன்பிறகு மாலையில் சுற்றுலா மற்றும் கலை மற்றும் பண்பாட்டு துறைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற உள்ளது. வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு, இந்து சமய அறநிலையத்துறை தொடர்பான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடியது. வழக்கம்போல் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர். கேள்வி நேரம் தொடங்க இருந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பினர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் பற்றி முதலில் விவாதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். அதனை கேட்ட சபாநாயகர் அப்பாவு, கேள்வி நேரம் என்பது மக்களுக்கானது. இந்த நேரத்தில் விவாதிக்க முடியாது. அடுத்ததாக வரும் பூஜ்ஜிய நேரத்தில் விவாதிக்கலாம் என்று கூறினார்.
ஆனால் அதிமுக எம்எல்ஏக்கள் கேட்கவில்லை. மாறாக கள்ளச்சாராய பலி தொடர்பான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் சபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சபை காவலர்கள் அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்றினர். இதனால் சட்டசபையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
நேற்றைய தினமும் அதிமுக எம்எல்ஏக்கள் சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். அதேபோல் இன்றைய தினமும் சபை காவலர்களால் அவர்கள் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு சட்டசபை தொடரில் 2 முறை எம்எல்ஏக்கள் சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டால் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்புள்ளது. அதன்படி அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் நடப்பு சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு அதிரடியாக உத்தரவிட்டார். இதனால் 29 ம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தொடரில் அதிமுக எம்எல்ஏக்களால் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications