முக்குலத்தோரை சமாளிப்பது எப்படி? அகமுடையாருக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கும் எடப்பாடி? அதிமுக பாலிடிக்ஸ்
சென்னை: சட்டமன்றத் தேர்தல் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக மாநிலங்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதிமுக, திமுக யாருக்கு ராஜ்ய சபா சீட்டை கொடுக்கப் போகிறார்கள் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது. திமுக கூட்டணியில் ராஜ்யசபா சீட்டைப் பெற மிகப்பெரிய போட்டியே நடந்து கொண்டிருக்கிறது. அதிமுகவிலோ முக்குலத்தோர் சமுதாயத்தை சமாதானப்படுத்தும் வகையில் அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு மாநிலங்களை எம்பி பதவி கொடுக்கலாம் என எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருக்கிறார் என்கின்றனர் அதிமுகவினர்.
அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட சில எம்பிக்களின் மக்களவை உறுப்பினர் பதவி காலம் நிறைவடைய இருக்கும் நிலையில் அதிமுக கூட்டணியில் குழப்பம் நிலவுகிறது. யாருக்கு அந்த பதவியை வழங்குவது என எடப்பாடி பழனிச்சாமிக்கு மறைமுக நெருக்கடி இருப்பதாக கூறப்படுகிறது.

தேமுதிகவுக்கு மக்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என கூறப்பட்டாலும், அப்படி ஒன்றும் ஒப்பந்தம் செய்யவில்லை என எடப்பாடி பழனிச்சாமி பேசியது பிரேமலதா விஜயகாந்த் தரப்பை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு மீண்டும் மக்களவை உறுப்பினர் பதவியை வழங்கி, அதிமுக கூட்டணிக்குள் இழுத்து வர எடப்பாடி திட்டமிட்டு இருப்பதாகவும் அதன் காரணமாகவே தேமுதிக ஓரம் கட்டுவதாக குற்றம் சாட்டுகின்றனர் தேமுதிகவினர். திமுகவை பொருத்தவரை கூட்டணி கட்சிகளுக்கு ராஜ்யசபா சீட்டு வழங்கப்படுமா அல்லது திமுகவைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படுமா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினே இறுதி முடிவு எடுப்பார் என்கின்றனர் திமுக கூட்டணி கட்சியினர்.
அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியும் இது தொடர்பாக நெருக்கமான வட்டாரத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் தோற்ற சில முன்னாள் அமைச்சர்களும், முக்கிய பிரமுகர்களும் ராஜ்யசபா எம்பி பதவியை பெற்று விட வேண்டும் என காய் நகர்த்தி வருகின்றனர். கடந்த முறை சிவி சண்முகம் சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். ஓபிஎஸ் ஆதரவாளரான முருகனும் ராஜ்யசபா எம்பி ஆனார்,
இந்த நிலையில் முருகன் பன்னீர்செல்வம் ஆதரவாளராகவே தொடருகிறார். இந்த நிலையில் யாருக்கு அதிமுக ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்பது குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளது. அதிமுகவை பொறுத்தவரை முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் அந்த கட்சிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. கொங்கு மண்டலத்திலும் அந்த கட்சி பலமாகவே இருக்கிறது. ஆனாலும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் அதிமுகவுக்கு கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய சரிவை கொடுத்தது.
அதே நேரத்தில் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமுதாய வாக்குகளும் பிற சமுதாய வாக்குகளும் அதிமுகவை ஓரளவு கௌரவமான வாக்குகள் பெற வைத்தது. அந்த வகையில் ஏற்கனவே அதிமுகவில் மறவர், தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் எம்எல்ஏக்களாகவும் மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிய பதவி இல்லை என கூறப்படுகிறது.
தென் மாவட்டங்களில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட அகமுடையார் வாக்குகள் இருக்கும் நிலையில் அவற்றை பெறுவதற்காக எடப்பாடி பழனிச்சாமி அந்த சமூகத்தை சேர்ந்தவருக்கு சீட்டு வழங்கலாம் என நினைக்கிறாராம். அதற்கேற்றார் போல் அதிமுகவில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த மதுரை டாக்டர் சரவணன் ராஜ்யசபா சீட்டைப் பெறலாம் என கூறப்படுகிறது. அதற்கு எடப்பாடியும் க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

மதுரையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டபோது அதிமுக உட்கட்சி அரசியலால் மூன்றாம் இடத்திற்கு சரவணன் தள்ளப்பட்டார். அதற்கு பிறகு பல நிகழ்வுகளை சரவணன் முன்னணியில் நின்று செய்து கொடுத்தார். செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா, ஆர்பி உதயகுமார் என மூவர் அணி இருந்தாலும் அவர்களுக்குள் உள்குத்து அரசியல் இருக்கிறது. எனவே மதுரையில் பொதுவான ஒருவரை கொண்டுவர வேண்டும் என அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு தூது அனுப்பி இருக்கின்றனர்.
மேலும் மருத்துவர் என்ற முறையிலும் படித்தவர் என்ற முறையிலும் டெல்லி அரசியலுக்கு சிவி சண்முகத்துக்கு உதவியாக சரவணன் இருப்பார் என எடப்பாடி பழனிச்சாமி கருதுகிறார். இதனால் தென் மாவட்ட பட்டியலில் ராஜ்யசபா எம்பி போட்டியில் சரவணன் முன்னிலையில் இருக்கிறார். அதே நேரத்தில் வட மாவட்டங்களில் சில முன்னாள் அமைச்சர்களும் காய் நகர்த்தி வருகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications