அதிமுக பேரணி.. ஸ்தம்பித்த அண்ணாசாலை!.. போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஜாம்
சென்னை: கள்ளச்சாராய விற்பனையை தடுக்காத திமுக அரசுக்கு எதிராக ஆளுநர் மாளிகையை நோக்கி அதிமுகவினர் பேரணியாக சென்று கொண்டுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் ஏராளமானோர் கையில் பதாகையுடன் பேரணியாக செல்வதால் கிண்டி, சைதாப்பேட்டையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணா சாலையில் அக்னி வெயிலில் வறுபட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
திமுக ஆட்சியில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆளுரிடம் புகார் அளிக்க அதிமுக சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் இன்று பேரணி நடைபெற்றது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், கொலை, கொள்ளை அதிகரித்துவிட்டதாகவும் அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச் சாராயத்தால் மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, திமுக ஆட்சி தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளிக்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது. அதற்காக இன்று கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் கிண்டியில் பேரணி நடைபெறுகிறது.
அதன்படி, வேளச்சேரி சாலை, சைதாப்பேட்டை, சென்னை மாநகர அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் பின்புறம் அதிமுகவினர் ஒன்றிணைந்தனர். அங்கிருந்து சின்னமலை தாலுகா அலுவலக சாலை வழியாக பேரணியாக ஆளுநர் மாளிகை சென்றடைந்து, முக்கிய நிர்வாகிகள் ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அதிமுகவினரின் பேரணியால் சென்னை சைதாப்பேட்டையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆளுநர் மாளிகை நோக்கி எடப்பாடி பழனிசாமி தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் பேரணியாக வந்ததால் கிண்டி, சைதாப்பேட்டை பகுதிகளில் கடும்ப போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பனகல் மாளிகையில் இருந்து ஆளுநர் மாளிகை செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அண்ணாசாலையில் பேருந்துகளும், கார்களும், இருசக்கர வாகனங்களும் அணிவகுத்து சென்றன. அக்னி நட்சத்திர கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அண்ணாசாலையில் சிக்கி வாகன ஓட்டிகள் அனைவரும் கடும் அவதிக்கு ஆளாகினர். இதனிடையே அதிமுக அனைவரும் மொத்தமாக ஆளுநர் மாளிகை நோக்கி வரவே காவல்துறையினர் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறையினருக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
எடப்பாடி பழனிச்சாமியின் வாகனத்தை மட்டும் ஆளுநர் மாளிகைக்குள் காவலர்கள் அனுமதித்தனர். ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து திமுக அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி புகார் மனுவை அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications