இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி அதிமுக தீர்மானம்! பாஜகவுக்கு ஷாக் தந்த எடப்பாடி!
சென்னை: 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் திமுகவுக்கும், பாஜகவுக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, இஸ்லாமிய சமுதாயத்தினரின் வாக்குகளை அறுவடை செய்ய பக்காவாக காய் நகர்த்த ஆரம்பித்திருக்கிறார். இஸ்லாமிய சிறைவாசிகள் முன் விடுதலைக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்.

ஆயுள் சிறைவாசிகளின் தண்டணையை ரத்து செய்யவோ, குறைக்கவோ முழுமையாக அதிகாரத்தை மத்திய, மாநில அரசுகளுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. குற்றவியல் சட்டம் 432 அடிப்படையில் தண்டனை குறைப்பதற்கு மத்திய அரிசன் ஒப்புதல் வேண்டும். அதே நேரத்தில், அரசியல் சட்டப்பிரிவு 161ன் அடிப்படையில் மாநில அரசுகளுக்கு முன் விடுதலை செய்வதற்கு உரிமை உண்டு.
இருபது ஆண்டுகள் சிறைவாசம் கழித்தவர்களை விடுதலை செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு முன் விடுதலை திட்டத்தை 1994ஆம் ஆண்டு கொண்டு வந்தது. மாநில அரசு தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி கருணை அடிப்படையில் விடுதலை செய்ய முடியும். அண்ணா பிறந்த நாள், அண்ணா நூற்றாண்டு, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு, கருணாநிதி நூற்றாண்டு விழா உள்ளிட்ட நிகழ்வுகள் காரணமாக, சிறையில் பத்து ஆண்டுகளை கழித்த ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளை கடந்து இருக்கும் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி தமிழக அரசு முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி, நெல்லை முபாரக், தடா ரஹீம் உள்ளிட்ட இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி அன்று சட்டசபையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் 36 பேர், 20 முதல் 25 ஆண்டுகளாக சிறையில் வாடுகிறார்கள் என்றும் இவர்கள் விடுதலைக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் கடந்த 2021 நவம்பர் மாதம் திமுக அரசு தான் அரசாணை கொண்டு வநந்தாகவும் குற்றஞ்சாட்டினார். முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகளின் உடல்நிலை, வயது மூப்பு, குடும்ப சூழல், உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து அவரை சந்தித்து தடா ரஹீம், தமிமுன் அன்சாரி, நெல்லை முபாரக் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்தனர். இப்போது அதிமுக பொதுக்குழுவிலேயே 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி மீண்டும் கவனம் ஈர்த்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications