Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்.ஜி,ஆர் காலத்திலேயே தன் அரசியல் செல்வாக்கை உண்டாக்கிய ஜெயலலிதா, அவரைக் காட்டிலும் முன்னேறி அதிமுகவை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அதிமுக இழந்த வரலாற்றை மறுபடியும் 2016 இல் நடைபெற்ற தேர்தல் மூலம் மீட்டுத் தந்தார் ஜெயலலிதா.

ஆளும் கட்சியே மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை அமைத்தது என்ற சாதனையை அவர் படைத்தார். 1984க்குப் பின்னர் ஆளும் கட்சியே திரும்ப அரியணை ஏறிய நிகழ்வு 2016ல் அரங்கேறியது.

AIADMK Returns to Power in 2016 Jayalalitha Achieves a Feat Unseen Since 1984

2016 சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் ஜெயலலிதா சென்ற இடம் எல்லாம் மக்கள் குவிந்தனர். திமுகவினால் வலுவான கூட்டணியை அமைக்க முடியவில்லை. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மூன்றாவது அணியை அமைக்க ஒரு திட்டம் போட்டார். அதில், விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளர் என அறிவித்தார். அதில் விசிக உள்ளிட்ட கட்சிகள் போய் கலந்தன. ஆகவே, வாக்குகள் ஆளும் கட்சிக்கு எதிராக ஒன்றிணையாமல் சிதறின. அது ஜெயலலிதா மறைமுகமாகச் செயல்படுத்திய திட்டம் என திமுக வாதிட்டது.

அதுவரை விஜயகாந்த் அரசியல் நுழைவை விமர்சித்து வந்த விசிக, மக்கள் நலக் கூட்டணிக்குள் சென்றது பெரிய பின்னடைவானது. கூட்டணியை வழிநடத்திச் சென்ற வைகோ இடையில் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொண்டார். அது அக்கூட்டணியின் நம்பகத் தன்மையை உருக்குலைத்தது. விஜயகாந்த் உடல்நிலையில் பல சந்தேகங்கள் நிலவின. அவரை வலுவான தலைமையாக மக்கள் ஏற்பதில் தயக்கங்கள் இருந்தன.

வைகோ திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்தார். ஆளும் கட்சியை அவர் எதிர்க்கவில்லை. திமுக தலைவர் மு.கருணாநிதியை அவர் 'குலத் தொழில் செய்யலாம்' எனப் பேசியதை அவரது கூட்டணியிலிருந்த திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் ஏற்கவில்லை. எனவே கூட்டணிக்குள் ஒரு ஒவ்வாமை நிலவியது.

அதை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டார் ஜெயலலிதா. இந்த முறை அவர் தேர்தல் பரப்புரையில் அமைத்த மேடையே அவரை வலிமையான ஒரு தலைமையாகக் கட்டமைத்தது. கூட்டணிக் கட்சியின் தலைவர்களின் எந்தத் துணையும் இல்லாமல் தனித்து அவர் ஒருவர் மட்டுமே மேடையில் தனி நாற்காலி போட்டு உரையாற்றினார்.

வேட்பாளர்களை ஒருபடி கீழே அமர்த்தி அறிமுகம் செய்துவைத்தார். பரப்புரைக்காகப் போகும் இடங்களில் எல்லாம் திமுகவின் 2006 முதல் 2011 வரையிலான ஆட்சியை 'அராஜக அட்சி' என்றார். 'அது ஒரு இருண்ட காலம்' என்றார். 'ஒரு நாளைக்கு 15 மணிநேரம் மின்வெட்டு நிலவியது. எனது ஆட்சியில் தமிழ்நாடு தன்நிறைவைப் பெற்றுள்ளது. இன்று மின்மிகை மாநிலம் தமிழ்நாடு' என்றார். அவரது கருத்தை மக்கள் ஏற்றனர். திமுக ஆட்சிக் காலத்தில் மின்துறை ஆற்காடு வீராசாமியிடம் இருந்தது. அவர் மாநிலத்தை இருளில் மூழ்கடித்தார். பல சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. மக்கள் விட்டில் மாவு அரைக்கக்கூட முடியாமல் பரிதவித்தனர். அதையே அவர் 2016 தேர்தலில் ஹைலட் விஷயமாக முன்வைத்தார்.

5193 ஏக்கர் நிலங்கள் மீட்பு

அடுத்து திமுக ஆட்சியில் நடைபெற்ற நில அபகரிப்பு. அதைப் பேசும் மேடைகளில் பிரதிபலித்தார் ஜெயலலிதா. சேலத்தில் நடைபெற்ற பரப்புரையில் அவர், 2011 வரை நடந்த திமுக ஆட்சிக்காலத்தில் 6515 புகார்கள் காவல்துறைக்கு வந்ததாகவும் அதில் 375 மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். ஆனால், 2011இல் தான் ஆட்சிக்கு வந்ததும் நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க மாவட்டம் தோறும் சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டு, 3678 கோடி ரூபாய் மதிப்புள்ள 5193 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பதியப்பட்ட 3264 வழக்குகளில் எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கர்ஜித்தார்.

அதாவது 35 லட்சத்து 78 ஆயிரம் சதுர அடி நிலங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆகவே அதிமுக ஆட்சி என்பது தொண்டர்களின் ஆட்சி எனவும் திமுக ஆட்சி என்பது குண்டர்களின் ஆட்சி எனவும் அடுக்குமொழியில் சொன்னார்.

சேலத்தில் பரப்புரை என்பதால் அங்கு வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்களால் அங்கம்மாள் காலனி மக்களின் நிலம் அபகரிக்கப்பட்டதாகவும் அதை மீட்டுப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அனைவரும் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் நிலம் பதிவு செய்வது, நில அபகரிப்பு என்பது பெரிய பூதமாகக் கிளம்பியிருந்தது. ஊடகங்களில் நிறையச் செய்திகள் வெளியாகின. மக்கள் பீதியில் நடமாடுவதாகவும் பேச்சுகள் அடிப்பட்டன. அதையே தன் பரப்புரைக்கு ஆயுதமாக மாற்றிக் கொண்ட ஜெயலலிதா, தன் ஆட்சியில் 'தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக மாறியுள்ளது' என்றார்.

ஒவ்வொரு மேடையிலும் 'மக்களால் நான், மக்களுக்காகவே நான், உங்களுக்காகவே நான் தவ வாழ்க்கை மேற்கொண்டுள்ளேன்' என்றார்.
1994இல் தனது ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் உள்ளாட்சி அமைப்புகளின் மூன்றில் 1 பங்கு இடத்தை பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டம். அதையே கருணாநிதி தான் கொண்டுவந்த சட்டம் எனப் பொய் சொல்கிறார். 2011இல் ஆட்சிக்கு வந்ததும் அதைத் தான் 50% ஆக உயர்த்தி உள்ளேன் என்றார்.

அதனை மு.கருணாநிதி, தேர்தலுக்கு முன்னதாக செய்ய வேண்டியதுதானே என்று விமர்சித்தார். அதற்குத் தான் முன்பே கொண்டுவந்திருந்தாலும் 2016 அமையப்போகும் ஆட்சியில்தான் அதை அமல்படுத்த முடியும். அதைக்கூட அறியாமல் பேசுகிறார் கருணாநிதி என்றார்.

ஜெயலலிதா மர்ம மரணம்

இந்தப் பரப்புரையின் போதே ஜெயலலிதா உடல்நிலை பற்றி சில யூகங்கள் கிளம்பின. சந்தேக புகை கிளம்பியது. ஜெயலலிதா உடல்நிலை மீதான எதிர்மறை எண்ணங்களை உடைத்து அதிமுக 2016 தேர்தலில் 134 தொகுதிகளில் வென்றது. திமுக 89 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. அப்போது கருணாநிதியின் செயல்பாடு பெரிதாக இல்லை. செயல் தலைவர், பின் கட்சித் தலைவர் எனப் படிப்படியாக உயர்ந்து வந்த ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதாவின் எதிர்வரிசையில் அமர்ந்தார்.

காங்கிரஸ் 8 தொகுதிகளையும் முஸ்லிம் லீக் 1 தொகுதியையும் வென்றன. மு.கருணாநிதி திருவாரூர் தொகுதியில் 121473 வாக்குகளைப் பெற்று வாகை சூடினார். ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 91303 வாக்குகளில் வென்றார். ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் களம்புகுந்து 97218 வாக்குகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றார்.

அதிமுக ஜெயலலிதா தலைமையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. மே மாதம் 23 ஆம் தேதி ஜெயலலிதா பதவியேற்கும்போதே அவர் நடையில் தளர்ச்சி தென்பட்டது. அவர் திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். அதன் மின் இட்லி சாப்பிட்டார்; கோப்புகளைப் பார்த்தார் எனச் செய்திகள் வந்தன. அவர் முகத்தை அவர் மறைந்ததாக அதிகாரப்பூர்வமாக டிசம்பர் 2, 2016 அன்று அறிவிக்கும் வரை என்ன நடைபெற்றது என்பது புரியாத புதிராகவே இருந்தது.

எழுதியவர்: கடற்கரய்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+