TIME TO LEAD.. அதிமுக குடுமி விஜய் கையில்! JCD பிரபாகர் தான் தலையெழுத்தை எழுதனும்! எடப்பாடிக்கு ஷாக்
சென்னை: தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிறகு, தற்போது அரசியல் வட்டாரத்தில் அதிகமாக பேசப்படும் விஷயம் அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும் என்பது தான். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமிக்கு 22 எம்எல்ஏக்களும், சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு 25 எம்.எல்.ஏ.க்களும் ஆதரவாக வாக்களித்திருப்பது, கட்சிக்குள் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அதிமுகவில் அடுத்து என்ன? நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பு வெளிப்படையாக வாக்களித்தது, அதிமுகவில் ஏற்பட்ட பிளவை சட்டப்பேரவையிலேயே வெளிச்சத்துக் கொண்டு வந்துள்ளது.

இதுவரை மறைமுகமாக இருந்த மோதல், இப்போது வெளிப்படையான மோதலாக மாறியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 25 பேர்மீதும் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பு
ஆனால் அது சாதாரண விஷயமல்ல. ஏனெனில், 47 எம்.எல்.ஏ.க்களில் 25 பேர் ஒரே அணியாக செயல்படுவது, கட்சிக்குள் பெரும்பான்மை ஆதரவு எந்த அணிக்குள் உள்ளது என்ற கேள்வியை உருவாக்கியுள்ளது.
இதில்தான் அடுத்த அரசியல் கணக்கு ஆரம்பமாகிறது. தற்போதைய சூழலில் எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் தரப்பு, "நாங்கள்தான் உண்மையான அதிமுக" என்ற வாதத்தை முன்வைக்க தொடங்கியுள்ளது. அதேசமயம், எடப்பாடி பழனிசாமி தரப்பு, "கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமை நான் தான்" என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.
ஜே.சி.டி. பிரபாகர்
இந்த பிரச்சினையில் முக்கியமான பங்கு வகிப்பவர் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர். சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார்? அதிகாரப்பூர்வ கொறடா யார்? என்பதை இறுதியாக அங்கீகரிக்க வேண்டியது அவர்தான். ஆனால் இதை உடனே தீர்மானிப்பாரா அல்லது காலதாமதம் செய்வாரா என்பது அரசியல் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. உண்மையில் முடிவெடுக்க வேண்டியது சபாநாயகர் என்றாலும்,விஜய் ஆலோசனைப்படி தான் அவர் நடப்பார். எனவே, அதிமுகவின் தலையெழுத்தை அவர் கையில் தான் உள்ளது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
சி.வி. சண்முகம்
மற்றொரு பக்கம், சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பு தற்போது ஒரே நேரத்தில் இரண்டு திட்டங்களை முன்னெடுக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒன்று, தவெக அரசுடன் நெருக்கத்தை அதிகரித்து அதிகாரப் பங்கீட்டில் இடம் பெறுவது. இன்னொன்று, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களை மீண்டும் ஒன்றிணைத்து புதிய தலைமையை உருவாக்குவது.
எடப்பாடி பழனிசாமி
இதற்கான சிக்னலாகவே "அனைவரையும் ஒன்றிணைக்க தயாராக இருக்கிறோம்" என்று எஸ்.பி. வேலுமணி வெளிப்படையாக கூறியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர். இது வெறும் கருத்தல்ல, அதிமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்க அவர் எடுத்துள்ள ஆயுதம் என கூறப்படுகிறது. அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமிக்கும் இது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. ஏனெனில், இதுவரை கட்சியின் முழு கட்டுப்பாடும் தன்னிடமே உள்ளது என்ற எண்ணம் இருந்த நிலையில், தற்போது சட்டப்பேரவையிலேயே பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் வேறு அணியில் இருப்பது சிக்கலை அதிகரித்துள்ளது.
அதிமுகவில் அடுத்து என்ன?
இதனால் அடுத்த சில நாட்களில் அதிமுகவில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தகுதி நீக்க நடவடிக்கை, பொதுக்குழு கூட்டம், புதிய தலைமை தேர்வு, சசிகலா மீண்டும் வருகை, தவெக அமைச்சரவையில் அதிமுக அதிருப்தி அணிக்கு இடமா என பல யூகங்கள் அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் தமிழக அரசியலை முழுமையாக கட்டுப்படுத்திய அதிமுக, இன்று அதிகாரப் போட்டியால் இரண்டாக பிளவுபட்டுள்ளது. இந்த மோதலில் இறுதியாக யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பது அடுத்த சில வாரங்களில் தெரியவரும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications