என்ன ஒருத்தரையும் காணோம்.. பஞ்சாய் பறந்த ஆதரவாளர்கள்! தனி ஆளாய் செங்கோட்டையன்! எடப்பாடியும் தஞ்சம்?
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் பேட்டி கொடுத்தபோது ஆயிரக்கணக்கில் திரண்ட தொண்டர்கள் ஒரே நாளில் எடப்பாடி பின்னால் சென்றதால் மிகுந்த அதிருப்தியில் இருக்கிறாராம் செங்கோட்டையன். கொங்கு மண்டலத்தில் தனக்கு இருக்கும் செல்வாக்கால் சில முன்னாள் அமைச்சர்கள் தனக்குப் பின்னால் வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில் தொலைபேசியில் பேசுவதோடு நிறுத்திக்கொண்டார்களாம். சென்னைக்கு வாருங்கள் சந்திப்போம் எனக் கூறிய பலர் கடைசி நேரத்தில் கைவிரித்துவிட்டதால் மீண்டும் எடப்பாடி தரப்புக்குச் சென்றுவிடலாமா என செங்கோட்டையன் யோசித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
அதிமுகவில் பிரச்சனை என்ற நிலையை கடந்து பிரச்சனையில்தான் அதிமுக இருக்கிறது என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பல பிளவுகள், சர்ச்சைகள், சண்டைகளில் சிக்கித்தவித்த அதிமுக கடந்த ஒரு வருடமாக அமைதியாக இருந்தது.
அதில் மீண்டும் கலகத்தை ஏற்படுத்தினார் முன்னாள் அமைச்சரும் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியுமான செங்கோட்டையன். கொங்கு மண்டலத்தில் குறிப்பாக ஈரோட்டில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்த செங்கோட்டையன் அதிமுகவின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராகப் பார்க்கப்பட்டவர்.

அதிமுக கலகம்
அதற்கான காலமும் கனிந்து வந்தது. சசிகலா சிறைக்குச் சென்றபோது முதல்வராக வாய்ப்பு இருந்தவர்களில் முதன்மையானவரும் முக்கியமானவரும் செங்கோட்டையன்தான். ஆனால் சில காரணங்களால் அந்த வாய்ப்பு எடப்பாடி பழனிசாமிக்குச் சென்றது. கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட எடப்பாடி தற்போது கட்சியையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறார். அதே நேரத்தில் சீனியர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எடப்பாடி மீது வைக்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி
பலர் அதிருப்தியில் இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்கின்றனர். ஆனால் முதல்வராகவும் வாய்ப்பு இருந்த தன்னையே எடப்பாடி மதிப்பதில்லை என்பதால் மிகுந்த அதிருப்தியில் இருந்தார் செங்கோட்டையன். ஆறு மாதங்களுக்கு முன்பாக ஜெயலலிதாவின் புகைப்பட விவகாரத்தைச் சுட்டிக்காட்டி கலகக் குரல் எழுப்பினார். பின்னர் பல நிகழ்வுகளில் எடப்பாடி பழனிசாமி முற்றிலுமாக செங்கோட்டையனைப் புறக்கணித்து வந்தார்.
அதிமுக
மோதல் உச்சம் அடைந்த நிலையில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் எனப் பேட்டி கொடுத்தது அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு வாரத்துக்கு முன்னதாகவே மனம் திறந்து பேசுவேன் என செங்கோட்டையன் கூற ஈரோட்டில் ஒட்டுமொத்த செய்தி சேனல்களும் குவிந்தன. மாவட்ட நிர்வாகிகள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை எடப்பாடிக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
செங்கோட்டையன் அதிர்ச்சி
எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்ததோடு டெல்லி பயணமும் மேற்கொண்டு இருந்தார் செங்கோட்டையன். எப்படியும் எடப்பாடி தன்னை சமாதானப்படுத்த முயல்வார் என நினைத்த நிலையில், அதற்கு நேர் மாறாக செங்கோட்டையனின் பதவிகளைப் பறித்து விட்டார் எடப்பாடி. அடிப்படை உறுப்பினர் பொறுப்பை மட்டும் விட்டு வைத்திருக்கிறார். இடையே டெல்லிக்கு சென்ற எடப்பாடி அமித் ஷாவைச் சந்தித்துப் பேசி, அதிமுக அதிருப்தியாளர்களை சந்திக்க வேண்டாம் என வலியுறுத்திய நிலையில், அதற்கு அமித் ஷாவும் ஒப்புக்கொண்டார்.
செங்கோட்டையன் ஆதரவாளர்கள்
இதற்கிடையே எடப்பாடி தரப்பிலிருந்து சில முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையனிடம் பேசி வந்தனர். எடப்பாடி நீலகிரி சென்ற நிலையில், சென்னைக்கு வாருங்கள் பேசிக்கொள்ளலாம் என அழைப்பு கொடுத்தார்களாம். இதை அடுத்து இரண்டு நாட்கள் சென்னையில் தங்கியிருந்த செங்கோட்டையன், டிடிவி தினகரனை சந்தித்துப் பேசியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அதனை செங்கோட்டையன் மறுத்திருப்பதையும் கவனிக்க வேண்டும்.
எடப்பாடி தரப்பு
எடப்பாடிக்கு எதிராக ஒரு அணியாக செயல்படலாம் என செங்கோட்டையனிடம் பேசியிருந்த முன்னாள் அமைச்சர்கள், கடைசி நேரத்தில் அவரது சந்திப்பைத் தவிர்த்து விட்டார்களாம். செங்கோட்டையனிடம் தொடர்பில் இருப்பது யார் என விசாரியுங்கள் என தனது தரப்பு ஆதரவாளர்களுக்கு எடப்பாடி உத்தரவு போட்டிருந்தார். அதனைத் தெரிந்து கொண்ட நிர்வாகிகள், செங்கோட்டையனின் சந்திப்பை கடைசி நேரத்தில் புறக்கணித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் அப்செட் ஆன செங்கோட்டையன், யாரையும் சந்திக்காமலேயே ஈரோடு திரும்பி இருக்கிறார்.
செங்கோட்டையன் ஆதரவாளர்கள்
இது ஒரு புறம் இருக்க, பேட்டி கொடுத்த போது ஆயிரக்கணக்கில் திரண்டு வந்த நிர்வாகிகள், ஒரே நாளில் எடப்பாடிக்கு கோபியில் வைத்து பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். இதனால் செங்கோட்டையன் மேலும் அதிர்ச்சி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. பாஜகவும் கைவிட்டு விட்டது. உசுப்பேற்றி விட்ட முன்னாள் அமைச்சர்களும் விலகிக் கொண்டனர். தற்போது பதவியும் போய்விட்ட நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறாரா? பாஜக தரப்புக்குத் தாவி விடலாமா அல்லது எடப்பாடி இடமே தஞ்சம் புகுந்து விடலாமா என்ற நிலையில் இருக்கிறார் செங்கோட்டையன் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications