எம்ஜிஆர் பொதுக் குழு, 1977தேர்தல்..சீனியாரிட்டியை விவரித்து இபிஎஸ்ஸை மறைமுகமாக தாக்கிய செங்கோட்டையன்
சென்னை: அண்ணா திமுகவின் நிறுவனரான மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்காக அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டிய அனுபவம் இருக்கிறது என்பது உள்ளிட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது தலைமையிலான கீழ் எதிர்கொண்ட சவால்களை விவரித்து அதிமுகவில் தாம் சீனியர் என்பதை பட்டியலிட்டு பேசினார் அக்கட்சியின் கலகக் குரலான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பகிரங்கமாக போர்க்கொடி தூக்கியுள்ளார் அவரது குருநாதரும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான செங்கோட்டையன். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நல்லகவுண்டம்பாளையத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கான மேடையில், எடப்பாடி பழனிசாமிக்கி சமமான அளவுக்கு செங்கோட்டையன் படம் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன், அதிமுகவில் தாம் மூத்த தலைவர் என்பதை விவரித்தார். எம்ஜிஆருக்காக 1975-ல் பொதுக்குழுவை பொருளாளராக இருந்து சிறப்பாக நடத்தி பாராட்டைப் பெற்றது; 1977-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட எம்ஜிஆர் உத்தரவிட்ட சம்பவம் உள்ளிட்டவைகளை சுட்டிக்காட்டினார் செங்கோட்டையன்.
மேலும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கிற அதிமுக தொண்டன் யார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்; அந்த அளவுக்கு இந்த இயக்கத்துக்காக பாடுபட்டிருக்கிறேன் என்றார். எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜெயலலிதாவின் தலைமையின் கீழ் தாம் எப்படியெல்லாம் செயல்பட்டேன் என்பதையும் ஜெயலலிதாவின் விரல் அசைவிலேயே அவர் என்ன நினைக்கிறார் என்பதை உணர்ந்து செயல்பட்டதையும் நினைவூட்டிப் பேசினார் செங்கோட்டையன். அத்துடன் தம்மை ஜெயலலிதா பாராட்டிய ஆடியோ பதிவையும் ஒலிபரப்பினார் செங்கோட்டையன்.
மேலும் அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் எண்ணம்; என்னை சோதிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாட்டுக்கு எதிராக வெளிப்படையாகவே பேசினார் செங்கோட்டையன். பொதுச்செயலாளர் கட்டளையின் கீழ் இந்த பொதுக் கூட்டம் நடைபெறுகிறது என்று மட்டும் சொன்ன செங்கோட்டையன், ஒரு இடத்தில் கூட எடப்பாடி பழனிசாமி என்ற பெயரை உச்சரிக்கவே இல்லை.
அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் எம்ஜிஆர் காலத்து சீனியர்களின் விருப்பம் என்பதை ஆணித்தரமாகவே இந்த கூட்டத்தின் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்துவிட்டார் செங்கோட்டையன். அடுத்தடுத்து ஈரோடு, கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் நடைபெறும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டங்களில் இன்னமும் அதீத உக்கிரத்தை செங்கோட்டையன் வெளிப்படுத்துவார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications