அதிமுக செங்கோட்டையன் கோரிக்கையை ஏற்று தென்னை விவசாயிகளுக்கு விரைவில் பணப்பட்டுவாடா-முதல்வர் ஸ்டாலின்
சென்னை: அண்ணா திமுகவில் கலகக் குரல் எழுப்பிய செங்கோட்டையன் எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று தென்னை விவசாயிகளுக்கு விரைவில் பணப் பட்டுவாடா வழங்கபடும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் (DISHA) குழுவின் மாநில அளவிலான 4-வது ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.
அதிமுகவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் (DISHA) குழுவின் மாநில அளவிலான 4-வது ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த ஆய்வுக் குழுக் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்றார்.

இது தொடர்பாக தலைமை செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே.ஏ.செங்கோட்டையன், இந்த குழுவின் உறுப்பினர் என்ற முறையில் கடந்த காலங்களில் கலந்து கொண்டேன்; தற்போதும் கலந்து கொண்டேன் என்றார்.
இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கே.ஏ.செங்கோட்டையன் முன்வைத்த கோரிக்கையை ஏற்று தென்னை விவசாயிகளுக்கு விரைவில் பணம் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முதல்வ மு.க.ஸ்டாலின் பேசுகையில், நாடாளுமன்ற உறுப்பினர் நம்முடைய தொல்.திருமாவளவன் அவர்கள் PMAYG திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு அலகு தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். இது தொடர்பான கருத்துரு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முனைவர் சுப்புராமன் (SCOPE) அவர்கள் கோரிக்கையை ஏற்று குழந்தைகளுக்கு கட்டப்படும் அங்கன்வாடி கழிப்பறைகளுக்கான மதிப்பீடுத் தொகை 2025-26 நிதியாண்டிலிருந்து 30 ஆயிரம் ரூபாயிலிருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை தொடக்கத்திலேயே தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தினை செயல்படுத்துவதைப் பொறுத்தவரை தமிழ்நாடு, இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இந்தத் திட்டத்தின் நான்காவதுகட்ட செயல்பாட்டை 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகையினை அடிப்படையாகக் கொண்டு 500-க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட, இதுவரை இணைப்புச் சாலை வசதி இல்லாத குக்கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இப்படியான 7 கிராமங்கள்தான் தமிழ்நாட்டில் இருக்கின்றன. வனப்பாதுகாப்பு சட்டத்தின்படி அனுமதி பெற்ற பிறகுதான் அங்கே இணைப்புச் சாலை வசதி ஏற்படுத்த முடியும். அதனால், ஏற்கனவே உள்ள சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். இந்தக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைகளுடன் மீண்டும் மத்திய அரசுக்கு இது குறித்து வலியுறுத்தப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications