அதிமுக என்பது அமித் ஷாவின் திமுகவாக மாறிவிட்டது.. இப்படியா வேடிக்கை பார்ப்பது.. கொந்தளித்த சிவசங்கர்
அரியலூர்: அதிமுக என்பது மெல்ல மெல்ல அமித்ஷாவின் திமுகவாக மாறிவிட்டதாக அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார். அதிமுக முன்பாகவே அண்ணா, பெரியாரை கேவலப்படுத்தி இருப்பது அவமானகரமான சம்பவம் என்று கூறியுள்ள அவர், திராவிட இயக்கத் தலைவர்களை விமர்சிப்பதை கூட வேடிக்கை பார்க்கும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளதாக கூறி இருக்கிறார்.
மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட முருகன் மாநாட்டில் திராவிட சித்தாந்தத் தலைவர்களான பெரியார், அண்ணா உள்ளிட்டோரை விமர்சித்து வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டன. இந்த முருகன் மாநாட்டில் அதிமுகவின் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.

திமுக விமர்சனம்
அதிமுக தலைவர்கள் முன்னிலையிலேயே அண்ணா மற்றும் பெரியார் தொடர்பாக விமர்சிக்கப்பட்டது கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதனால் திமுக உள்ளிட்ட கட்சிகள் அதிமுகவை சாடி வருகின்றன. அண்ணாவை கேவலப்படுத்துவதை அண்ணா பெயர் தாங்கிய கட்சி ரசிக்கிறது என்றால், உங்களின் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? அல்லது பாஜக பாசமா?..
அதிமுக விளக்கம்
அண்ணாவின் பெயரைக் காப்பாற்றுவதை விட தங்களின் சொத்துகளை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்துவிட்டார்கள் என்று ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்திருந்தார். இதன்பின் அதிமுக ஐடி விங் மற்றும் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் விளக்கம் அளித்து வருகின்றனர். முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்தனர்.
அமைச்சர் சிவசங்கர் பேட்டி
இந்த நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுக என்பது அமித்ஷாவுக்கு கட்டுப்பட்ட்ட அதிமுகவாக மாறிவிட்டது. அதனால் தான் எடப்பாடி பழனிசாமி இருக்கும் மேடையிலேயே, அவர் பேசவிடாமல் அமித்ஷா இந்த கூட்டணியை அறிவித்தார். அவர் எல்லாவற்றையும் மவுன சாட்சியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்தார்.
வாய் திறக்காத அதிமுக
இன்று அதேபோல், திராவிட இயக்கத் தலைவர்களை பெரியார், அண்ணாவை விமர்சிக்கும் செயல்பாடுகளை வேடிக்கை பார்க்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எப்போது கேட்டாலும் திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அதிமுகவினர், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை வாய் திறக்கவில்லை.
அமித்ஷாவின் திமுக
இது மிகவும் அவமானகரமான சம்பவம் நடந்துள்ளது. அது அமித்ஷாவின் திமுகவாக மெல்ல அதிமுக மாறி வருகிறது. பாஜகவின் நோக்கம் தமிழின் தொன்மையை நிலை நாட்டக் கூடாது. அப்படி ஒப்புக் கொண்டால், இந்தியை திணிக்க முடியாது. மக்களை மத ரீதியாக ஒன்றிணைத்து வடமாநிலங்களை போல் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் விழிப்புணர்வு அடைந்தவர்கள் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications