ரெண்டு பட்ட அதிமுக.. விஜய்க்கு கொண்டாட்டம் தான்! எஸ்பிவி டீம் எடுத்த திடீர் முடிவு! பெரிய ட்விஸ்ட்!
சென்னை: அதிமுகவில் மீண்டும் ஒரு பெரிய பிளவு உருவாகியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையை எதிர்த்து, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையில் தனி அணியாக சில எம்எல்ஏக்கள் திரண்டுள்ளனர். தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 17 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம் தரப்பில் 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இன்று எஸ்பி வேலுமணி தரப்பு விஜய்க்கு ஆதரவு தரலாம் என சொல்லப்படுகிறது
தமிழக அரசியலில் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக பல்வேறு சவால்களை சந்தித்திருந்தாலும், ஜெயலலிதா தலைமையில் கட்சி மீண்டும் எழுச்சி பெற்றது. குறிப்பாக 2011 மற்றும் 2016 ஆகிய இரு சட்டமன்றத் தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது வரலாற்றுச் சாதனையாக பார்க்கப்பட்டது.

ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தொடர்ந்து உள்கட்சிப் பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டது.
முதலில் சசிகலா - ஓ.பன்னீர்செல்வம் மோதல் வெடித்தது. அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும், டிடிவி தினகரன் அணியும் பிரிந்தன.
அதிமுக பிளவு
பல முக்கிய தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறினர். ஓ.பன்னீர்செல்வம் உட்பட பலர் பின்னர் வேறு அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்தனர். இதனால் அதிமுகவின் பழைய வலிமை படிப்படியாக குறைந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், கடந்த பல தசாப்தங்களாக ஆளும் கட்சி அல்லது பிரதான எதிர்க்கட்சி என்ற நிலையை வைத்திருந்த அதிமுக, தற்போது மூன்றாவது கட்சியாக தள்ளப்பட்டிருப்பது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2026 தேர்தல் தோல்வி
பல தொகுதிகளில் அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டதுடன், சில இடங்களில் டெபாசிட்டையும் இழந்தது. தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்திருந்த நிலையில், தற்போது அது வெளிப்படையான அணிப்பிரிவாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தற்போது 17 எம்எல்ஏக்கள் மட்டுமே உறுதியாக உள்ளனர் என்றும், மறுபுறம் எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் தரப்பில் 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எஸ்பி வேலுமணி
கொங்கு மண்டலத்தில் அதிமுக இன்னும் தாக்கத்தை வைத்திருப்பதாலும், அங்கு வேலுமணிக்கு வலுவான ஆதரவு இருப்பதாலும் அவரது செல்வாக்கு அதிகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் வட மாவட்டங்களில் சி.வி. சண்முகத்திற்கு ஆதரவு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. வேலுமணி - சண்முகம் அணிக்கு முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், சி. விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன், இரா. காமராஜ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எடப்பாடி பழனிசாமி
இந்த அணியினர் முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு என்னவென்றால், "எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்ற பிறகு அதிமுக தொடர்ந்து தேர்தல் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. கூட்டணி அமைப்பிலும் பெரிய தவறுகள் நடந்தன. வேட்பாளர்களுக்கு போதிய ஆதரவும் வழங்கப்படவில்லை" என்பதுதான்.
இதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக எஸ்.பி. வேலுமணியையும், கொறடாவாக சி. விஜயபாஸ்கரையும் நியமிக்க வேண்டும் என்று தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிவி சண்முகம்
மற்றொரு பக்கம், எடப்பாடி பழனிசாமியை சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஆதரித்து 17 எம்எல்ஏக்கள் தனியாக கடிதம் அளித்துள்ளனர். இதனால் இரு தரப்பும் நேரடியாக மோதும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் தரப்பு, தற்போதைய ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டை எடுக்கலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது. சிலர் அமைச்சரவையில் கூட இணையலாம் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.
விஜய்க்கு ஆதரவு
ஆனால், தவெகவுக்கு ஆதரவு அளித்தால் அதிமுக தனது தனித்துவத்தை முழுமையாக இழந்து விடும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கடுமையாக எதிர்த்து வருவதாக கூறப்படுகிறது. இதுவே தற்போது மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பாஜக எந்த அணிக்கு ஆதரவு தரும் என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. அண்ணாமலை ஆதரவாளர்கள், பழனிசாமி தரப்பு, வேலுமணி தரப்பு என பல்வேறு கோணங்களில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications