பறிபோகும் அதிமுக MLAகள் பதவி? 3ல் 2 பங்கு இருந்தாலும் தப்ப முடியாது.. சட்டத்தில் உள்ள பெரிய ட்விஸ்ட்
சென்னை: இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபித்தது. அதேநேரம் அதிமுகவில் இருந்த உட்கட்சி மோதலும் வெளிச்சத்திற்கு வந்தது. எடப்பாடியின் எச்சரிக்கையை மீறி 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை பாயும்.. ஒருவேளை 3ல் இரு பங்கு ஆதரவு இருந்தால் தப்பிக்க முடியுமா என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
தமிழக அரசியலில் நேற்று மே 12ம் தேதி நடந்த அதிரடித் திருப்பம், கோட்டை வட்டாரத்தையே அதிர வைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் தலைமையை எதிர்த்து, எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ-க்கள் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர். கூடவே, என்.டி.ஏ கூட்டணியிலிருந்தும் வெளியேறுவதாகப் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

இரண்டாக பிளவு
அதைபோல இன்று நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திலும் கூட அதிமுக எம்எல்ஏக்கள் இரு பிரிவுகளாகவே பிரிந்து வாக்களித்தனர். எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு, அதாவது விஜய் அரசுக்கு எதிராக 22 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். அதேநேரம் ஆதரவாக எஸ்பி வேலுமணி- சிவி சண்முகம் தரப்பில் 25 பேர் வாக்களித்தனர். இப்போது பலருக்கும் எழுந்துள்ள கேள்வி. இந்த எம்.எல்.ஏ-க்கள் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா? ஒருவேளை மூன்றில் இரண்டு பங்கு (2/3) மெஜாரிட்டி இருந்திருந்தால் அவர்கள் எஸ்கேப் ஆகியிருப்பார்களா என்பது தான்.
குதிரை பேரம்
இந்திய அரசியலில் 'குதிரை பேரம்' மற்றும் கட்சித் தாவல்களைத் தடுக்கவே 1985ல் அரசியலமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணை கொண்டு வரப்பட்டது. 1967ல் ஹரியானாவைச் சேர்ந்த காயா லால் என்ற எம்எல்ஏ 15 நாட்களில் மூன்று முறை கட்சி மாறியதால் வந்த 'ஆயா ராம், கயா ராம்' (Aaya Ram, Gaya Ram)- அதாவது ராம் வருகிறார்.. ராம் போகிறார் என்ற கிண்டல் வாசகமே இந்தச் சட்டத்திற்கு அடித்தளம்.
அதிமுகவைப் பொறுத்தவரை ஒரு பக்கம் தங்களை அங்கீகரிக்கக் கோரி இபிஎஸ் கடிதம் கொடுக்க, வேலுமணி தரப்பு மறுபுறம் கடிதம் கொடுத்துள்ளது. இரு தரப்புமே இப்படி மாறி மாறி சொல்லி வருகிறது.. ஆனால், சட்டம் என்ன சொல்கிறது?
சட்டம் சொல்வது
1986ம் ஆண்டு விதிகளின்படி, அரசியல் கட்சி யாரைத் தலைவராக நியமிக்கிறதோ அவரைத்தான் சபாநாயகர் அங்கீகரிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் சுபாஷ் தேசாய் vs மகாராஷ்டிர ஆளுநர் தீர்ப்பின்படி, சபாநாயகர் ஒரு கட்சியின் பெரும்பான்மை எம்எல்ஏக்களின் விருப்பத்தை விட, அந்த கட்சியின் முடிவிற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். அதிமுகவின் சட்டவிதிப்படி பொதுச்செயலாளரான எடப்பாடிக்கு தான் அந்த அதிகாரம் உள்ளது. எனவே, இபிஎஸ் நியமிக்கும் கொறடாவையே சபாநாயகர் அங்கீகரிக்க வேண்டியிருக்கும்.
2/3 மெஜாரிட்டி இருந்தால் தப்பித்துவிடலாமா?
இதுதான் பலரும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கும் ஒரு விஷயம். 10வது அட்டவணையின் 4வது பிரிவின்படி, ஒரு கட்சியின் 2/3 எம்எல்ஏக்கள் பிரிந்து சென்றால் மட்டும் தகுதி நீக்கத்திலிருந்து தப்ப முடியாது. அதற்கு இரண்டு நிபந்தனைகள் உள்ளன:
1. கட்சி இணைப்பு: முதலில் அதிமுக என்ற 'அரசியல் கட்சி' முறைப்படி தவெகவுடன் இணைய வேண்டும். (தேர்தல் ஆணையத்தில் இதைப் பதிவு செய்ய வேண்டும்). அப்போது தான் இந்த 3ல் இரு பங்கு என்ற விதி செல்லுபடியாகும்.
2. எம்.எல்.ஏ-க்களின் ஒப்புதல்: அந்த இணைப்பை 2/3 பங்கு எம்.எல்.ஏ-க்கள் ஏற்க வேண்டும்.
அதாவது அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் தவெகவுடன் இணைந்தால் மட்டுமே இந்த விதி செல்லுபடியாகும். வெறும் எம்.எல்.ஏக்கள் மட்டும் பிரிந்து சென்று ஆதரவு அளிப்பது கட்சித் தாவல் ஆகவே கருதப்படும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்!
வேலுமணி தரப்பு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இதுபோல சொல்வதன் மூலமாகவே அவர்கள் தன்னிச்சையாகத் தங்கள் உறுப்பினர் தகுதியைத் துறந்துவிட்டதாக (Voluntarily giving up membership) சட்டம் கருதும். இதற்கு முறைப்படி ராஜினாமா கடிதம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என ரவி எஸ் நாயக் vs இந்திய யூனியன் (1994) வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
பதவிக்கு ஆபத்து?
அதேநேரம் வேலுமணி தரப்பு விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தால் தானாக அவர்களின் எம்.எல்.ஏ பதவி காலியாகாது. கட்சி தலைமை இது தொடர்பான நடவடிக்கை எடுக்க வேண்டும். இருப்பினும், அதிமுக ஏற்கனவே தொடர் தோல்விகளால் பலவீனமாக உள்ளது. நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, எடப்பாடி தரப்பு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்விக்குறி தான்!












Click it and Unblock the Notifications