நாய் கூட பிஏ.. அலற வைத்த RS பாரதி! திமுக ஆரிய மனப்பான்மை.. DNAவில் மேட்டிமைத்தனம்.. அதிமுக அட்டாக்!
சென்னை: திமுக மாணவரணி சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இப்போது நாய் கூட பிஏ பட்டம் வாங்குகிறது, டாக்டர் பட்டம் திராவிட இயக்கம் போட்ட பிச்சை என அவர் பேசியதற்கு அதிமுக ஐடி விங், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டங்களை தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக மாணவர் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர்கள், மாணவரணி நிர்வாகிகள், கல்வியாளர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி," கம்யூனில் ஜி.ஓ. மூலம் தான் இங்கு நம்மில் பல பேர் டாக்டர்கள். பல பேர் இதை மறந்து விட்டார்கள். ஏதோ குலப்பெருமையால், கோத்திர பெருமையால் டாக்டர் ஆகிவிட்டது போல பேசுகிறார்கள். நான் வெளிப்படையாக பேசுகிறேன். நான் எதைப் பற்றியும் கவலைப்படுவதே கிடையாது. மனசுக்கு பட்டதை வெளிப்படையாக பேசக்கூடிய தைரியம் உள்ளவன் நான்
இதை நாம் நினைக்க வேண்டும். நான் ஒரு வக்கீல் என்றால் இது என்ன குல பெருமையால் கோத்திர பெருமையால் வந்ததா? நான் படிக்கும்போது பிஏ படித்தாலே வீட்டில் போர்டு வைத்துக் கொள்வார்கள். இப்போது நாய்கூட பிஏ பட்டம் வாங்குகிறது. எங்கள் பட்டப் படிப்புகள் குலம், கோத்திர பெருமையால் வரவில்லை. எங்கள் பட்டப் படிப்புகள் டாக்டர் பட்டங்கள் திராவிட இயக்கம் போட்ட பிச்சை. குலம் கோத்திர பெருமையால் டாக்டராகவில்லை. சாதிவாரி இட ஒதுக்கிட்டதால் எங்களின் பலர் மருத்துவர்கள் ஆகினர். எல்லோரும் பட்டம் பெறுவதை தடுப்பதற்கு தான் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் வந்துள்ளது."என பேசினார்.
ஆர்.எஸ்.பாரதியின் இந்த பேச்சுக்கு பல தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனது பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் பேசிய அவர்," நாய் கூட பட்டம் பெறுகிறது என்பதை உள்நோக்கத்துடன் பேசவில்லை என்றும், கல்வி அனைவருக்குமானதாகிவிட்டது என்ற அர்த்தத்தில் கூறினேன்" என விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சில் ஆரிய மேட்டிமைத்தனம் நிறைந்துள்ளதாக அதிமுக ஐடி விங்க் விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"மேட்டிமைத்தனத்தின் குத்தகைக்காரரான அறிவாலய வாயிற்காவலர் ஆர்.எஸ்.பாரதியின்
, பட்டப்படிப்பு பற்றிய திமுகவின் அற்ப எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். பட்டப்படிப்பு என்பது அவ்வளவு கேவலமாக போய்விட்டதா?
கல்வி எனும் சொத்தை அனைவருக்குமானதாக்கியதில் திராவிட இயக்கத்தின் பங்கை யாரும் மறுக்க முடியாது. ஏதோ கல்வி என்பது இவர்கள் போட்ட பிச்சை என்ற தொனியில் பேசுவது, திமுக ஆரிய மனப்பான்மையோடு இருப்பதையே காட்டுகிறது. மன்னராட்சி கட்சியான திமுகவின் DNAவில் இருக்கும் மேட்டிமைத்தனம் என்றைக்கும் மாறாது! எல்லா படிப்புக்குமான முக்கியத்துவம் இருப்பதை உணர்த்தும் விதமாக, இளங்கலைப் பட்டதாரிகளைக் கொச்சைப்படுத்தும் இதுபோன்ற கருத்துகள் கடுமையாக எதிர்க்கப்படவேண்டும்!" என கூறியுள்ளது.
மேலும் ஆர்.எஸ்.பாரதி பேசிய பேச்சின் வீடியோவை பகிர்ந்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார்,"நாய் வாலை நிமிர்த்த முடியாது" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications