ஜூன் 23-ல் அதிமுக பொதுக்குழு - உதயமாகிறதா தலைவர், செயல் தலைவர் பதவி?
சென்னை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ந் தேதி சென்னையில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
அதிமுகவில் இரட்டை தலைமை என்பது மிகப் பெரும் சர்ச்சைகளை உருவாக்கி கொண்டே இருக்கிறது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே யாருக்கு ஆதரவு அதிகம்? யார் வலிமையான கோஷ்டி? என்பது ஒவ்வொரு பிரச்சனையின் போதும் வெடித்து கொண்டுதான் இருக்கிறது.
அண்மையில் 2 ராஜ்யசபா தேர்தல் வேட்பாளரை அறிவிப்பதற்கு அதிமுக பெரும் போராட்டத்தையே எதிர்கொண்டது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருதரப்பும் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் ஆதிக்கம் செலுத்த முனைப்பு காட்டியது. அதனால் வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் திணறியது அதிமுக.

பொதுச்செயலர் பதவி
பொதுவாக அதிமுகவில் இரட்டை தலைமைக்கு எதிரான கருத்து அதிகம் உள்ளது. இதனால் பழைய பாணியில் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. அப்படி பொதுச்செயலாளர் பதவி மீண்டும் உருவாக்கப்பட்டதால் அதனை யார் கைப்பற்றுவது என்பதிலும் ஓபிஎஸ், ஈபிஎஸ் கோஷ்டிகள் முட்டி மோதுகின்றன.

தலைவர், செயல் தலைவர் பதவி?
அதேநேரத்தில் தற்போதைய ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ஒழித்துவிட்டு அதற்கு இணையாக தலைவர், செயல் தலைவர் பதவிகளை உருவாக்கிவிடலாம் என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இது தொடர்பான விவாதங்களும் அதிமுகவில் களைகட்டிக் கொண்டிருக்கிறது. அப்போதும் கூட அதிமுகவில் அக்கப்போர் பஞ்சாயத்து ஓய்ந்துவிடாது என்கிற கருத்தும் உள்ளது. இந்நிலையில்தான் சென்னையை அடுத்த வானகரத்தில் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 23-ந் தேதி நடைபெறும் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் அறிவித்துள்ளனர்.

சசிகலா முயற்சி
இன்னொரு பக்கம், அதிமுகவை எப்படியும் கைப்பற்றுவேன் என சசிகலா கூறி வருகிறார். சசிகலாவின் முயற்சிகளுக்கு இதுவரை டெல்லி பாஜக மேலிடம் முட்டுக்கட்டை போட்டு வந்தது. அண்மைக்காலமாக சசிகலாவின் முயற்சிகளுக்கு டெல்லி மேலிடம் க்ரீன் சிக்னல் கொடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் சசிகலா டெல்லி செல்லக் கூடும்; அதிமுகவில் மீண்டும் பிரளயம் வெடிக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

சசிகலா எதிர்ப்பு அணி
இந்த நிலையில் சசிகலாவை அதிமுகவுக்குள் சேர்க்கவே முடியாது என்பதில் பிடிவாதமாக இருக்கும் ஈபிஎஸ் தரப்பு, செயற்குழு, பொதுக்குழுவில் தங்களது செல்வாக்கை நிலை நிறுத்தவும் பகீரத பிரயத்தனம் மேற்கொள்ளும். இதுசசிகலாவுக்கு செக்காக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனால் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications