பாஜக கூட்டணி முறிவு? அண்ணாமலைக்கு எதிராக 2-வது தீர்மானம்? நாளை அதிமுக மா.செ.க்கள் கூட்டம்- பரபர!
சென்னை: பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக நாளை நடைபெற உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடும் என அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளது. தேசிய அளவில் பாஜக தலைமையிலான 38 கட்சிகளின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக 2-வது பெரிய கட்சியாக இடம்பெற்றுள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அண்மையில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஊழல் பேர்வழி என அண்ணாமலை விமர்சித்திருந்தது பெரும் பிரச்சனையை உருவாக்கியது.
அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம்: இதனையடுத்து சென்னையில் ஜூன் 13-ந் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அதிமுக- பாஜக கூட்டணி முறியும் நிலை உருவானது.
அண்ணா குறித்த விமர்சனம்: இதனைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணா குறித்தும் அண்ணாமலை விமர்சித்தார். இதற்கும் அதிமுக தரப்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அண்ணாவை விமர்சித்தவர்கள் நாக்கு துண்டாகும்; அழுகும் என மூத்த அதிமுக தலைவர் செல்லூர் ராஜூ எச்சரித்தார். அதிமுகவின் மூத்த தலைவர்களான ஜெயக்குமார், சிவி சண்முகம், எஸ்பி வேலுமணியும் கண்டனம் தெரிவித்தனர்.

பாஜக கூட்டனி முறிவு என அறிவிப்பு: ஆனாலும் அண்ணா குறித்த கருத்தில் உறுதியாக இருப்பதாக அண்ணாமலை பதில் கொடுத்தார். இதனால் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை; பாஜக ஒரு வேஸ்ட் லக்கேஸ்; பாஜகவால் நோட்டாவை கூட தாண்ட முடியாது என அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் அறிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமாதன முயற்சிகள் தோல்வி: இந்நிலையில் அதிமுக-பாஜக கூட்டணியில் சமரசம் ஏற்படும் வகையில் செல்லூர் ராஜூ ஒரு பேட்டி அளித்தார். மத்தியில் பிரதமராக மோடிக்கு அதிமுக ஆதரவு தருகிறது; தமிழ்நாட்டில் முதல்வராக எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக ஆதரவு தர வேண்டும் என்றார். ஆனால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க பாஜக ஆதரவு தராது என அண்ணாமலை மீண்டும் கொடி பிடித்தார். இது ஓட்டுமொத்த அதிமுகவையும் கொந்தளிக்க வைத்தது.
டெல்லியில் அதிமுக தலைவர்கள்: இதனால் அதிமுகவின் 5 தலைவர்கள் கொண்ட குழு திடீரென டெல்லி சென்றது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரை சந்தித்து, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என முடிவு செய்திருந்தனர் அதிமுக தலைவர்கள். ஆனால் அதிமுக தலைவர்களை சந்திக்க அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை என கூறப்பட்டது. இதனால் ஜேபி நட்டாவை மட்டும் அதிமுக தலைவர்கள் சந்தித்தனர் என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை மட்டும் சந்தித்தனர் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த சந்திப்புகளிலும் அண்ணாமலையை மாற்ற முடியாது என ஜேபி நட்டா திட்டவட்டமாக கூறிவிட்டார் எனவும் கூறப்பட்டது.
மீண்டும் மா.செ.க்கள் கூட்டம்- தீர்மானம் என்ன?: இந்நிலையில் சென்னையில் நாளை மீண்டும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ளார். சென்னையில் நாளை நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொள்ளக் கூடிய தீர்மானம் நிறைவேற்றப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் அண்ணாமலையை மாற்றினால்தான் பாஜகவுடன் கூட்டணி என்கிற வகையிலான நிபந்தனை தீர்மானம் நிறைவேற்றப்படவும் சாத்தியம் இருக்கிறது என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள். விடியும் போது வெடிக்கப் போகுது!












Click it and Unblock the Notifications