ஆஹான்.. பாஜகவிடம் பணிந்தது! அதிமுகவின் அடடே அந்தர் பல்டி! 2 நாளிலேயே முடிவுக்கு வந்ததா வீராவேசம்'?
சென்னை: எங்கள் கூட்டணியில் பாஜக இல்லை என் அறிவித்த ஈரம் காய்வதற்குள் அந்தர் பல்டி அடித்துவிட்டது அண்ணா திமுக. அந்த கட்சியினர் கடந்த சில நாட்களாக பேசி வந்த வீராவேச வசனங்கள் 2 நாட்களிலேயே பிசுபிசுத்துப் போய்விட்டது நகைப்பாக விமர்சிக்கப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஊழல் பேர்வழி அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார். இதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.

அண்ணா விவகாரம்: இதனைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணா குறித்தும் கடுமையாக வசைபாடினார் அண்ணாமலை. இதற்கு எதிராக அதிமுகவின் மூத்த தலைவர்களான ஜெயக்குமார், சிவி சண்முகம், செல்லூர் ராஜூ கொந்தளித்தனர். இதில் செல்லூர் ராஜூதான் அண்ணாமலையின் நாக்கு துண்டாகும்; அழுகிப் போய்விடும் என எச்சரிக்கை விடுத்தார். இதற்கும் அண்ணாமலை தரப்பில் காட்டமான பதில்கள் வந்தன.
கூட்டணி முறிந்ததாக அறிவிப்பு: இதனால் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை; இதுதான் கட்சியின் நிலைப்பாடு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். அத்துடன் பாஜகவை வேஸ்ட் லக்கேஜ் என வசைபாடினார். பாஜகவால் நோட்டாவை கூட தாண்ட் முடியாது என்றார். இதற்கு பாஜக நிர்வாகிகள் பலரும் வரிந்து கட்டி பதில் தந்தனர்.
பதிலடி தருவோம் என ஆவேசம்: இதனிடையே பாஜக தலைவர்களை அதிமுகவினர் விமர்சிக்கக் கூடாது என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படி எல்லாம் எந்த உத்தரவும் எங்களுக்கு வரவில்லை; நாங்கள் பதிலடி தந்தே தீருவோம் என அதிமுகவினர் மல்லுக்கட்டினர்.
தடாலடி செல்லூர் ராஜூ யூ டர்ன்: இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொல்லிவிட்டார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தவறாகப் பேசுகிறார் என்பதை நாங்கள் சொல்கிறோம். வேறு ஒன்றும் இல்லை. அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்றெல்லாம் ஒரு கட்சியின் உள் விவகாரங்களில் நாங்க ஏன் தலையிட வேண்டும். அண்ணாமலையின் நடைபயணத்தில் நாங்கள் குறை சொல்லவில்லை. அவரது கருத்துதான் பிரச்சனை. அவர் நடைபயணம் போகட்டும்.. கட்சியை வளர்க்கட்டும். நாங்களும் மோடிஜிதான் நாளைய பிரதமராக வரனும் என்கிறோம் என்றெல்லாம் வியாக்கியான விளக்கம் கொடுத்துள்ளார்.
அதிமுக அந்தர் பல்டி: அதாவது கடந்த 2 நாட்களாக அதிமுகவினர் பாஜகவுக்கு எதிராக காட்டிய அத்தனை வீர வசனங்களும் இன்றைய செல்லூர் ராஜூவின் பேச்சு மூலம் முடிவுக்கு வந்துவிட்டது. பாஜகவுடனான கூட்டணியே இல்லை என அறிவித்த அதிமுகவின் ஆவேசம் 2 நாட்களில் அந்தர் பல்டி அடித்துவிட்டதே என்பதுதான் நகைப்புடனான விமர்சனமாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications