ஓபிஎஸ்ஸை விடுங்க.. எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பால் பாஜகவிற்குத்தான் ரியல் டேஞ்சர்.. எப்படி தெரியுமா?
அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவிற்கு பின்னடைவு ஏற்படும்.
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பு காரணமாக உண்மையான சிக்கல் என்னவோ ஓ பன்னீர்செல்வத்தை விட பாஜகவிற்குத்தான்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. கடந்த மே மாதத்தில் இருந்து அதிமுகவில் நடந்த உட்கட்சி மோதலுக்கு தற்போது தீர்வு கிடைத்து உள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கினர். அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லும். அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்கிறோம். அதிமுக பொதுக் குழு வழக்கில் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

சிக்கல்
இந்த தீர்ப்பு காரணமாக உண்மையான சிக்கல் என்னவோ பாஜகவிற்குத்தான். அதிமுகவில் இரட்டை தலைமை இருக்கிற வரை அந்த கட்சியில் வாக்குகள் சிதறாது. அதாவது கவுண்டர்கள் வாக்குகள் மட்டுமின்றி மற்ற ஜாதியினர் வாக்குகளும் கிடைக்கும். இதன் மூலம் கூட்டணியில் இருக்கும் பாஜகவிற்கு பலன் கிடைக்கும். அதாவது கூட்டணியில் உள்ள பாஜக இதனால் நேரடியாக பலன் பெரும். அதுவே ஒற்றை தலைமை என்றால் அதிமுகவில் முக்குலத்தோர் வாக்குகள் திமுக பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் அதிமுகவில் இல்லை.

அதிமுக
இதனால் அவர்களின் வாக்குகள் திமுக பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவிற்கு பின்னடைவு ஏற்படும். இன்னொரு பக்கம் ஒற்றை தலைமை இருந்தால் கொங்கு மண்டலத்தில் மட்டும் அதிமுக கண்டிப்பாக வலிமையாக இருக்கும். ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தில் வலிமையான அரசியல் தலைவர். கொங்கு மண்டலத்தில் கவுண்டர்கள் வாக்குகளை அவர் கவர அதிக வாய்ப்புகள் உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலிலேயே கொங்கில் அதிமுக நல்ல இடங்களை பெற்றது.

பாஜகவிற்கு சிக்கல்
இப்போது எடப்பாடி ஒற்றை தலைமை ஆகிவிட்டார். கட்சியில் பிரச்சனை இல்லை. இதனால் கொங்கில் மீண்டும் அதிமுக பழைய பலத்தை பெறும் வாய்ப்புகள் உள்ளன. இப்படி நடக்கும் பட்சத்தில் பாஜக கொங்கில் வளர்வது கேள்விக்குறியாகும். கொங்கில் மட்டுமே பாஜக வலிமையாக உள்ளது. அதோடு பாஜக தலைவர் அண்ணாமலையும் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். இதன் மூலம் கொங்கை கைப்பற்ற பாஜக முயன்று வருகிறது. ஆனால் அதை தடுக்கும் விதமாக எடப்பாடி அங்கே பெரிய தலைவராக இருக்கிறார்.

எடப்பாடி
இரட்டை தலைமை என்ற நிலை இருந்தால் எடப்பாடியை வீழ்த்திவிட்டு பாஜக இங்கே காலூன்றி இருக்க முடியும். கவுண்டர்கள் மத்தியில் அண்ணாமலை பெரிய தலைவராக உருவெடுத்து இருக்க முடியும். ஆனால் அதை தடுக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி தற்போது ஒற்றை தலைவராகிவிட்டார். அண்ணாமலையா - எடப்பாடியா என்று பார்த்தால் கொங்கு மண்டலம் பெரும்பாலும் எடப்பாடி பக்கமே நிற்கும். அதனால் பாஜக எடப்பாடியின் வளர்ச்சியை எப்படி சமாளிக்கும், எப்படி எதிர்கொள்ளும் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

ஒற்றை தலைமை
அதிமுக மீண்டும் ஒற்றை தலைமைக்கு கீழ் சென்றுள்ளது. இரட்டை தலைமை இருந்தவரை நாங்கள்தான் எதிர்க்கட்சி என்றும் பாஜக கூறி வந்தது. நாங்கள்தான் 2ம் இடம் என்றெல்லாம் பாஜக கூறி வந்தது. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. இதனால் அதிமுக மீண்டும் பழைய பார்மிற்கு திரும்பி உள்ளது.இதை பாஜக எப்படி சமாளிக்கும் என்று தெரியவில்லை. முக்கியமாக எதிர்க்கட்சி என்று கூறி வந்த பாஜக.. மீண்டும் அதிமுகவின் தனிப்பட்ட வலிமையை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications