இடைத் தேர்தல் எப்ப நடந்தாலும் நாங்கதான் வெல்வோம்.. எடப்பாடி பழனிசாமி உற்சாகம்
சென்னை: எந்நேரமும் தேர்தலை சந்திக்க தாங்கள் தயார் என்றும், எப்போது தேர்தலை நடத்தினாலும் 20 தொகுதிகளிலும் வெற்றி பெற போவது அதிமுகதான் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பல நாள் காத்திருப்புக்கு பின்னர் அரசுக்கு சாதகமாக இன்று தீர்ப்பு வந்து சேர்ந்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை தொடர்ந்து அதிமுக தரப்பு உற்சாகத்தில் உள்ளது. தீர்ப்பு கூறப்பட்ட சிலமணி நேரங்களிலேயே அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வர தொடங்கி விட்டனர்.
[டமால் பட்டாசு, திகட்டும் ஸ்வீட்ஸ்... தீர்ப்பை வரவேற்று இன்றே தீபாவளி கொண்டாடும் அதிமுக தொண்டர்கள்!]

நல்ல தீர்ப்பு
பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா, இறைவனின் ஆசியால்தான் இந்த நல்ல தீர்ப்பு வந்துள்ளது. திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவிருந்த நிலையில் தள்ளி வைக்கப்பட்டது. ஆனாலும் அப்போதே நாங்கள் தேர்தலுக்கு தயாராகி விட்டோம்.

உடனே நடத்த முடியாது
அதேபோல, 18 எம்எல்ஏக்கள் தகுதி செய்யப்பட்டு அந்த இடங்களும் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்ட உடனேயே அந்த இடத்திலும் அதிமுக போட்டியிட்டு வெற்றி பெறும். உடனடியாக இடைத்தேர்தல் நடத்துவது என்பது சட்டப்பிரச்சனை. அதனை இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டுமே தவிர நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

நாங்கள் தயார்
ஆனால் இடைத்தேர்தல் நடக்க உள்ள 20 தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெறும் என்பது உறுதி. அதற்காக எந்த நேரத்தில் தேர்தல் நடத்தினாலும் அதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.

உறுப்பினரே இல்லை
தீர்ப்பு குறித்த தினகரனின் கருத்து குறித்து கேட்டதற்கு, தினகரனுக்கு என்ன அனுபவம் கிடைத்துள்ளது என்று தெரியவில்லை என்றும், கட்சியின் அடிப்படை உறுப்பினராகவே இல்லாத தினகரனின் கருத்து எப்படி கட்சிக்கு பொருந்தும் என்றும் முதலமைச்சர் கூறினார்.












Click it and Unblock the Notifications