டமால் பட்டாசு, திகட்டும் ஸ்வீட்ஸ்... தீர்ப்பை வரவேற்று இன்றே தீபாவளி கொண்டாடும் அதிமுக தொண்டர்கள்!
Recommended Video
திருச்சி : 18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும் என உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இனிப்புகளை வழங்கியும் பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.
டிடிவி.தினகரன் ஆதரவாளர்களான 18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த மகிழ்ச்சியை அ.தி.மு.க. தொண்டர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வெளியாவதையொட்டி நீதிமன்றத்தை சுற்றி டிடிவி தினகரன் கட்சியினர் குவிந்திருந்தனர். அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் அதிமுக தொண்டர்கள் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
வாழ்த்துகள், கொண்டாட்டம்
தீர்ப்பு ஆளும் கட்சிக்கு ஆதரவாக வந்த நிலையில் அதிமுக தொண்டர்கள் குஷியடைந்துள்ளனர். அதிமுக தலைமை அலுவலகம் அருகே பட்டாசு வெடித்து, இனிப்புகளை பரிமாறி அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
முதல்வர் வீடு அருகே கொண்டாட்டம்
இதே போன்று முதல்வர் பழனிசாமி இல்லம் அருகே கூடி இருந்த அதிமுக தொண்டர்களும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். திருச்சி மாநகர மாவட்டம் சார்பில் சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மாநகர மாவட்ட செயலாளர் ப. குமார் எம்.பி. தலைமையில் பட்டாசுகளை வெடித்து தொண்டர்கள் மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட்டனர்.
திருச்சியிலும் கொண்டாட்டம்
நிர்வாகிகளும், தொண்டர்களும் இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கி தீர்ப்பு குறித்து மக்களிடம் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர். திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அலுவலகத்தில் மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் சுரேஷ் குப்தா தலைமையில் தொண்டர்களும் நிர்வாகிகளும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
தொண்டர்களுக்கு ஸ்வீட்
திருச்சி புறநகர் மாவட்டம் கழகம் சார்பில் மணப்பாறை, துவரங்குறிச்சி, துவாக்குடி, திருவெறும்பூர், முசிறி, துறையூர், ஶ்ரீரங்கம், வையம்பட்டி, மண்ணச்சநல்லூர், தாத்தையாங்கார்பேட்டை, தொட்டியம், உப்பிலியபுரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததையொட்டி பொதுமக்களுக்கு தொண்டர்கள் இனிப்புகளை வழங்கினார்கள்.