அஞ்சு பத்து சீட்டு தான்.. வெடுக்கென பேசிய எடப்பாடி! கடுப்பான தவெக புள்ளிகள்! கட் அண்ட் ரைட்டாக விஜய்
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் அதிமுக, கூட்டணியை பலப்படுத்த பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது. கூட்டணிக்கு தேமுதிக பாமக தவிர்த்து தமிழக அரசியலில் புதுவரவான தமிழக வெற்றிக் கழகத்தை அழைத்து வர மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது. விஜய் தரப்பில் சில நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்ததாகவும், ஆனால், அவரது எதிர்வினை தவெக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் விஜய்க்கு சென்ற நிலையில் கூட்டணி எல்லாம் வேண்டாம்.. தனித்துப் போட்டி என்ற நிலையிலேயே தொடர்வோம் என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது.
தமிழக அரசியலில் காங்கிரஸ் - திமுக என்று இருந்த காலம் மாறி, திமுக அதிமுக என்ற நிலை தற்போது வரை தொடர்கிறது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுக அதிமுகவே தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கிறது. இதுவரை அதிமுக தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்திருக்கிறது.
ஆனால் திமுகவோ ஒரு முறைக்கு மேல் ஆட்சி அமைத்ததில்லை. இந்த நிலையில் 2011, 2016 தேர்தல்களில் ஜெயலலிதா தலைமையில் வெற்றி பெற்ற அதிமுக, இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. அதற்கு பிறகு ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதற்குப் பிறகு நான்கரை ஆண்டு கால ஆட்சியையும் நிறைவு செய்தார். தொடர்ந்து 2021 தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது. கட்சி தோல்வியடைய இரட்டை தலைமை தான் காரணம் என எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் சொல்ல அதற்கு ஓபிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பதவி ஏற்றார். ஆனால் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை கண்டது.
2019 நாடாளுமன்ற தேர்தல், நகர்ப்புற ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள், 2021 சட்டமன்ற தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல், ஈரோடு இடைத்தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் 2026-ல் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி காய் நகர்த்தி வருகிறார். அதற்கு கூட்டணி பலம் அவசியம் என்பதால் கடந்த காலங்களில் விலக்கி வைக்கப்பட்ட பாஜகவுடன் மீண்டும் கூட்டு சேர்ந்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளையும் அழைத்து வர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி அமைவது சாத்தியம் தான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இது ஒரு புறம் இருக்க தமிழ்நாடு அரசியலில் புதிய வரவான விஜய் கட்சி பேசுபொருளாக மாறி இருக்கிறது. தனித்துப் போட்டி என்ற முடிவில் விஜய் உறுதியாக இருக்கிறார். அதே நேரத்தில் அதிமுக கூட்டணிக்கு விஜயை அழைத்து வரவேண்டும் என விரும்புகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
இதை அடுத்து விஜய் தரப்பில் இருந்து மூன்று முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது. ஆனால் கூட்டணிக்கு அழைத்த எடப்பாடி பழனிச்சாமி தமிழக வெற்றிக் கழகத்தின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. விஜய் தரப்பில் எண்பது தொகுதிகள், துணை முதலமைச்சர் பதவி கேட்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஆனால் தேசிய கட்சியான பாஜகவுக்கு 20 தொகுதிகள் தான் கொடுத்தோம். பிற கட்சிகளுக்கும் அப்படித்தான். பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதங்களை வைத்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் தான் கடந்த காலங்களில் அவர்களுக்கு சீட்டுகள் ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஒரு தேர்தலை கூட சந்திக்காத விஜய்க்கு அவ்வளவு தொகுதிகள் கொடுக்க முடியாது. மேலும், துணை முதல்வர் பதவி, அமைச்சரவையில் இடம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
அதிகபட்சம் பாஜகவுக்கு கொடுத்தது போல 20 தொகுதிகள் தான் கொடுக்கப்படும். மேலும் நாங்கள் நடத்திய கருத்துக்கணிப்பின்படி விஜய், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், ராஜ்மோகன், சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டவர்களை தவிர கட்சியில் தெரிந்த முகங்கள் இல்லை. இவர்களும் வட மாவட்டங்களில் தான் போட்டியிடுவார்கள். ஆனால் தென் மாவட்டங்களில் மக்களுக்கு நன்கு தெரிந்த மாவட்ட செயலாளர்களும் நிர்வாகி கூட இல்லை. அதனால் அந்த வேட்பாளர்களையும் நாங்கள் தான் முடிவு செய்வோம்.
மேலும், அவர்களது பின்னணி, பொருளாதார பலம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு சீட்டு வழங்கப்படும் என கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த 'மூம்மூர்த்தி' ந்ரிவாகிகள் அங்கிருந்து நடையை கட்டியுள்ளனர். இதனை கேட்ட விஜய் அவர்களை லெஃப்ட் ரைட் வாங்கி விட்டாராம். "நான் தான் அப்போதே சொன்னேன். கூட்டணி எல்லாம் வேண்டாம். 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தனித்துப் போட்டியிட்டு வாக்கு சதவீதத்தை நிரூபிப்போம். அதற்கு பிறகு 2031 தேர்தலில் நாம் யார் என்பது அனைத்து கட்சிகளுக்கும் தெரியும். எனவே தனித்துப் போட்டி என்ற நிலைப்பாட்டிலேயே தொடருங்கள்.. தேவை இல்லாமல் அதிமுக பாஜகவிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம்" என கடுமையாகவே கூறியுள்ளாராம்.
இந்த தகவலை அறிந்த திமுக வட்டாரம் உற்சாகமடைந்திருக்கிறது. அதிமுக பாஜக கூட்டணி சற்றே நெருக்கடி கொடுத்தாலும், விஜய் வரவால் திமுகவின் வாக்கு வங்கி சரியும். அதே நேரத்தில் விஜய் பாஜகவை எதிர்த்து விட்டு தற்போது கூட்டணியில் சேர்ந்துள்ளார் என விமர்சிக்கலாம். எது எப்படி இருந்தாலும் அதிமுக கூட்டணிக்கு விஜய் சென்றாலும், செல்லாவிட்டாலும் தங்களுக்கு தான் நல்லது என்கிறதாம் திமுக தரப்பு..












Click it and Unblock the Notifications