கட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க கூடாதென சொல்லியிருக்கிறோம்.. அதிமுக பிரமாண பத்திரம் தாக்கல்
சென்னை: கட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க கூடாது என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாக அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத பேனர் வைத்தது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, சுபஸ்ரீ மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட கோரி சுபஸ்ரீ தந்தை ரவி தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட வழக்குகள் இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கின் விசாரணை அறிக்கையை காவல் துறையினர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பள்ளிக்கரணையில் அனுமதியில்லாமல் பேனர் வைத்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சுபஸ்ரீ மரண வழக்கின் விசாரணை முடிவை இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது..
அதேபோல, கட்சி நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தி திமுக தரப்பில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்திருந்தது. தற்போது ஒருமாதம் கழித்து இன்று பேனர் வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாக அதிமுக தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது..
சீன பிரதமரை வரவேற்று பேனர் வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த டிராபிக் ராமசாமிக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பேனர் வைக்க அரசின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தான் உத்தரவு பிறப்பித்ததாகவும், பேனர் வைக்க அனுமதி அளித்ததாக செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், சுபஸ்ரீயின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என தெரிவித்த நீதிபதிகள், விபத்து குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஏன் உத்தரவிட வேண்டும் என கேள்வி எழுப்பினர். மேலும், கூடுதல் இழப்பீடு தொடர்பாக மோட்டார் வாகன தீர்ப்பாயத்தை அணுகலாம் என அறிவுத்திய நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications